ஆ. விஷ்ணு வர்தினி
சாஃப்ராவின் ஏழாவது மனமகிழ் மன்றம் வரும் மே மாதத்தில் திறக்கப்படவுள்ளது. இயற்கைக்கு உகந்த விதத்தில் அமைக்கப்பட இருக்கும் இம்மன்றம், கூரை சேமிப்புத் தொட்டிகளில் மழைநீரை சேமிக்கும் வசதியுடைய முதல் சாஃப்ரா மன்றமாகும். ஆண்டுதோறும் இரண்டு ஒலிம்பிக் போட்டி அளவிலான நீச்சல் குளங்களை நிரப்பக்கூடிய அளவுக்கு நீர் சேமிக்கப்பட்டு நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும். நேற்று நடந்தேறிய கட்டுமானத் தளச் சுற்றுலாவில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், "கொவிட்-19ஆல் ஏற்பட்ட தாமதங்களைத் தாண்டி சாஃப்ராவின் கட்டுமானப் பணிகள் விறுவிறுவென நடந்துகொண்டிருக் கின்றன.
"குடும்பங்களும் சமூகத்தாரும் ஒன்றுகூடி நோய்ப்பரவல் சூழலுக்குப் பின்னர் தங்களது பிணைப்பை வலுப்படுத்திக்கொள்ள இந்த மனகிழ் மன்றம் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய சாஃப்ராவின் தலைவரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகமது, சுவா சூ காங் பூங்காவுடன் மன்றம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள விதத்தைச் சுட்டினார்.
பூங்காவின் அமைதியையும் இயற்கைச் சூழலையும் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இக்கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வை குறிக்கும் வண்ணம் அமைச்சர் கான், மூத்த துணை அமைச்சர் ஸாக்கி இருவரும் லெப்பர்ட் மரம் ஒன்றும் நட்டனர். சுவா சூ காங் பெரு விரைவு ரயில் நிலையத்திலிருந்து ஐந்து நிமிட தொலைவில் உள்ள சுவா சூ காங் பூங்காவில் கட்டப்பட்டு வருகிறது சாஃப்ராவின் இந்த ஐந்து மாடிக் கட்டடம்.
தேசத்தின் தற்காப்புக்கு பங்காற்றி வரும் தேசிய சேவையாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மன்றம், சிங்கப்பூரின் வடமேற்கு பகுதியில் வசிக்கும் 90,000க்கும் மேற்பட்ட தேசிய சேவையாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எட்டக்கூடிய தூரத்தில் இருக்கும். உணவு பானக் கடைகள், பொழுதுபோக்கு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் முதலிய வசதிகளைக் கொண்ட சுவா சூ காங் சாஃப்ரா, ஆண்டுதோறும் 1.4 மில்லியன் வருகையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்புற நீச்சல் குளமும் ஃபுட்சால் விளையாட்டு மைதானமும் உள்ள முதல் சாஃப்ராவாக இது விளங்கும். மாணவர்களுக்கென 16 செறிவூட்டல் நிலையங்களும் மாணவர் பராமரிப்பு நிலையமும் இங்கு அமையவிருக்கின்றன.
ஆண்டுதோறும் 450,000 கிலோவாட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய வல்ல 660 சூரிய ஒளித் தகடுகள் மன்றத்தின் கூரையில் பொருத்தப்படும்.
அனைத்து சாஃப்ரா மன்றங் களைக் காட்டிலும் இதுவே ஆக அதிகமான எண்ணிக்கையிலான சூரிய ஒளித் தகடுகள். மின் சாரத்தைச் சேமிக்க இக்கட்டடம் கொண்டுள்ள திட்டங்களில் இதுவும் ஒன்று. கட்டட, கட்டுமான ஆணையத்தின் 'கிரீன் மார்க் பிளேட்டினம் சூப்பர் லோ எனர்ஜி' தரநிலையை எட்டும் சிங்கப்பூரின் முதல் மனமகிழ் மன்றமாக விளங்கும் குறிக்கோள் கொண்டுள்ளதாகவும் சாஃப்ரா தெரிவித்தது. 1972ஆம் ஆண்டில் சாஃப்ரா மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டது. ஜூரோங், மவுண்ட் ஃபேபர், பொங்கோல், தெம்பனிஸ், தோ பாயோ, ஈசூன் ஆகிய பகுதிகளில் தற்போது ஆறு சாஃப்ரா மனமகிழ் மன்றங்கள் இயங்கி வருகின்றன.

