'பிடிஓ' வீடுகளுக்கான காத்திருப்புக் காலம் அவற்றின் அமைவிடத்தையும் கட்டுமானத் திட்டத்தையும் அவற்றின் இதர நிலவரங்களையும் பொறுத்து இருக்கும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் விளக்கியது.
கொவிட்-19 கிருமி தலைவிரித்தாடியபோது பிடிஓ வீட்டுக்கான காத்திருப்புக் காலம் நான்கு முதல் ஐந்தாண்டுகள் வரைப்பட்டதாக இருந்தது.
இப்போது கட்டப்பட்டு வரும் 94 பிடிஓ வீட்டுத் திட்டங்களில் இடம்பெறும் வீடுகளை வாங்குவோர் இரண்டாண்டுகளுக்கும் 5.9 ஆண்டுகளுக்கும் இடையில் அதாவது சராசரியாக சுமார் 4.3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
அதிக கட்டடங்கள் நிறைந்திருக்கின்ற, எம்ஆர்டி சுரங்க நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்ற இடங்களில் கட்டப்படும் பிடிஓ வீடுகளைப் பொறுத்தவரை ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அதிக காலஅவகாசம் தேவைப்படும்.
20 முதல் 50 மாடி வரைப்பட்ட உயரத்தைக் கொண்டுள்ள, கூடுதலாக வடிவமைப்பு வசதிகளுடன்கூடிய சிக்கலான கட்டுமான திட்டங்களைப் பொறுத்தவரை, வீடுகளைக் கட்ட அதிக காலம் பிடிக்கும்.
அதேபோல, அங்காடி நிலையம் அல்லது பேருந்து முனையம் போன்ற இதர கட்டடங்களுடன் சேர்த்து கட்டப்படும் வீடுகளைப் பொறுத்தவரை திட்டமிடவும் வடிவமைக்கவும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் அதிக காலஅவகாசம் தேவை என்று கழகம் குறிப்பிட்டது.
வரும் ஆண்டுகளில் மேலும் சிக்கலான பிடிஓ கட்டுமான திட்டங்கள் நடப்புக்கு வரும் என்று கழகம் எதிர்பார்க்கிறது.
மவுண்ட் பிளசன்ட் பகுதியில் பழைய காவல்துறை பயிலக இடத்தில் சுமார் 5,000 பிடிஓ வீடுகள் கட்டப்படும். 'கிரேட்டர் சதர்ன் வாட்டர்ஃபிரண்ட்' பகுதியில் உள்ள கெப்பல் கிளப் இடத்தில் 6,000 பிடிஓ வீடுகள் கட்டப்பட இருக்கின்றன.
புதிய வீட்டுத் திட்டங்களை தீட்டி, கட்டுவதற்குப் பல ஆண்டுகாலம் பிடிக்கும். திட்டமிடுவது, வடிவமைப்பது, கட்டுமானப் பணிகளை நிறைவேற்றுவது முதலான பல கட்டங்கள் அவற்றில் இருக்கின்றன.
சுற்றுச்சூழல் அல்லது பாரம்பரிய அம்சங்களுடன் கூடிய இடங்களைப் பொறுத்தவரை தன்னுடைய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னதாக கழகம் பல ஆய்வுகளை நடத்தும்.
ஒரு பிடிஓ திட்டத்தை வடிவமைக்க ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் பிடிக்கும். இதற்கு கழகம் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படும்.
இட கட்டுமான எல்லை, மொத்த பிளாட் விகிதம் போன்ற பலவற்றுக்கும் நகர மறுசீரமைப்பு ஆணையம் அனுமதி தரவேண்டும்.
பிறகு இரண்டாண்டு காலம் நில ஆயத்தப் பணிகள் நடக்கும். கட்டுமான குத்தகை வழங்கப்படும். பிறகுதான் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
காலாங்/வாம்போவில் 'கெம்பாஸ் ரெசிடன்சஸ்' என்ற பிடிஓ கட்டுமானத் திட்டம் மிகவும் சிக்கலானது. இந்த வீடுகள் இப்போது கட்டப்பட்டு வருகின்றன.
2019ல் இத்திட்டம் தொடங்கியது. நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் கொவிட்-19 காரணமாக திட்டம் தாமதம் அடைந்து 2024 முடிவில் அல்லது 2025 தொடக்கத்தில்தான் பூர்த்தியாகும்.
கெம்பாஸ் ரெசிடன்சஸ் திட்டத்தில் 29 முதல் 37 மாடிகளைக் கொண்ட நான்கு புளோக்குகள் இருக்கும். அந்தத் திட்டம் பூன் கெங் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே இடம்பெறுகிறது. காலாங் பலதுறை மருந்தகம், குவாங் வாய் ஷு மருத்துவமனை போன்ற பல கட்டடங்களும் அருகே இருக்கின்றன.
அந்தத் திட்ட கட்டுமானப் பணிகளுக்கான ஆயத்த வேலைகளை மேற்கொள்ள மூன்று முதல் ஐந்து மாத காலம் பிடித்தது. வீவக புளோக்குகளுக்கு அஸ்திவாரத்தைப் அமைக்க ஒன்பது மாதங்கள் ஆனது. வீவக புளோக்குகளையும் குடியிருப்பு வீடுகளையும் கட்ட 34.5 மாதங்கள் பிடிக்கும்.
இந்தப் பணிகள் முடிந்ததும் வீடுகளில் சன்னல்கள், கதவுகள், கழிவறைச் சாதனங்கள், சுவர், தரைக்கற்கள் பதித்தல் முதலான பணிகள் நடக்கும். பிறகு அதிகாரிகள் வீடுகளைப் பரிசோதனையிட்டு உரிமையாளரிடம் சாவியை ஒப்படைப்பார். இதற்கு மூன்று மாத காலமாகும்.

