ஜூரோங் வெஸ்டில் வாடகை வீடுகளில் வசிக்கின்ற, பள்ளிக்கூட மாணவர்கள் சுமார் 50 முதல் 60 பேர் இலவசமாக கல்விச் செறிவாக்கச் செயல்திட்டங் களில் சேர்ந்து பலனடையலாம்.
மலை ஏறுதல், கலை, கை வினை போன்ற தேர்ச்சிகளை அவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
இதற்கு வகை செய்யும் யுஓஎல்-பிபிஎச்ஜி சமூக முன்னேற்றச் செயல்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
இந்த முயற்சி, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சுடன் சேர்ந்து இடம்பெறுகிறது.
யுஓஎல் குருப் என்பது சொத்து, விருந்தோம்பல் துறை நிறுவனம். பான் பசிபிக் ஹோட்டல்ஸ் குருப் (பிபிஎச்ஜி) அதனுடைய ஹோட்டல்துறை துணை நிறுவனம் ஆகும்.
இவை இரண்டும் சேர்ந்து, தேவை உள்ள மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இந்தக் கல்விச் செறிவாக்கச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களும் மாணவர்களும் சுயசார்புடன் திகழவேண்டும்; சமூகத்தில் அவர்களின் நிலை உயர வேண்டும்.
இதற்காக சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு 'சமூக இணைப்பு' என்ற முயற்சியைத் தொடங்கி இருக்கிறது.
நேற்று தொடங்கப்பட்ட புதிய செயல்திட்டம் இதன் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.
பலவகை நாட்டங்களுடன், அனுபவங்களுடன் நாலும் அறிந்தவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்.
வகுப்பறைக்கு வெளியே பலவற்றையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் பல கல்விச் செறிவாக்க நடவடிக்கைகள் இடம்பெறும் என்று யுஓஎல் நிறுவனம் தெரிவித்தது.
அந்தக் காலகட்டத்தில் 200 மாணவர்களை எட்டலாம் என்பது அதன் இலக்கு.
பல்வேறு கடைத்தொகுதிகளிலும் ஹோட்டல்களிலும் கல்விச் செறிவாக்க நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று நம்பும் யுஓஎல்-பிபிஎச்ஜி நிறுவனங்கள் இச்செயல்திட்டத்தில் சேர்ந்து உதவும்படி அவற்றின் முதலாளிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

