கலிபோர்னியாவைச் சேர்ந்த 'ஈட் ஜஸ்ட்' என்ற புதிய நிறுவனம், சிங்கப்பூர் உணவு முகவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இதையடுத்து, அந்த நிறுவனம் ரத்த நிணநீர் (சீரம்) இல்லாத இறைச்சியை உற்பத்தி செய்யும்.
அந்த நிறுவனத்தின் ஆய்வுக்கூடம் மூலம் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சி விலை மலிவாக இருக்கும். தாக்குப்பிடிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
விலங்கு ரத்த நிணநீரைப் பயன்படுத்தி செயற்கை பொரித்த கோழியை (நகட்) தயாரிக்க 2020ல் அந்த நிறுவனம் ஒழுங்குமுறை அங்கீகாரத்தை சிங்கப்பூர் உணவு முகவையிடம் இருந்து பெற்று இருந்தது.
செயற்கை இறைச்சியைத் தயாரிக்க விலங்கு ரத்த நிணநீர் தேவைப்படுகிறது. இதை உருவாக்க அறிவியல் அறிஞர்கள் கருவுற்றிருக்கும் பசுமாடுகளை அறுத்து அவற்றின் கருக்களில் இருந்து ரத்தத்தை எடுக்க வேண்டி இருந்தது.
இப்படி பெறப்படும் ரத்த நிணநீர் ஒரு லிட்டர் கிட்டத்தட்ட US$2,000 (S$2,620) விலைக்கு விற்கப்படுகிறது என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உணவு, அறிவியல் தொழில்நுட்ப செயல்திட்ட இயக்குநர் பேராசிரியர் வில்லியம் சென் கூறினார்.
இதனால் செயற்கை இறைச்சி தயாரிப்பு செலவு கூடும். இதன் காரணமாக விலங்கு ரத்த நிணநீர் இல்லாமல் செயற்கை இறைச்சியை உற்பத்தி செய்ய நிறுவனங்கள் பலவும் முயன்று வருகின்றன.
சிங்கப்பூர் உணவு முகவை அங்கீகாரம் வழங்கி இருப்பதை அடுத்து ஈட் ஜஸ்ட் நிறுவனம், தன் உற்பத்தி ஆலையில் ரத்த நிணநீர் இல்லாத செயற்கை இறைச்சியை உற்பத்தி செய்யும்.
அந்த ஆலை ஆயிரக்கணக்கான பவுண்ட் எடையுள்ள இறைச்சியைத் தயாரிக்கும் ஆற்றலுடன் இருக்கும் என்று ஈட் ஜஸ்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜோஷ் டெட்ரிக் ஜனவரி 18ஆம் தேதி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த உற்பத்தி ஆலை இந்த ஆண்டில் திறக்கப்படும்.

