வானொலி தொகுப்பாளர், நடிகை, பெண்ணியவாதி, விமர்சனச் சிந்தனையாளர் எனப் பல பரிமாணங்களில் தனது முத்திரையைப் பதித்துள்ளார் திருமதி ஜெயசுதா சமுத்திரன். இவர் தற்போது, 'வில்லியம் கிரேண்ட் அண்ட் சன்ஸ்' நிறுவனத்தின் அனைத்துலக வர்த்தகக்குறி மேலாளராக பணிபுரிகிறார். இவர் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் தன்னுடைய கல்வியை முடித்து, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
இவரது திருமணம் கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு மிகச் சிலர் மட்டுமே அழைக்கப்பட்டதால் திருமதி ஜெயசுதாவும் அவருடைய கணவரும் திருமணம் முடிந்து அடுத்த 12 மணி நேரத்தில் 21 உறவினர்களின் வீட்டிற்குச் சென்று ஆசி பெற்றார்கள். இதைத் தம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவமாக திருமதி ஜெயசுதா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தன் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டுகள் எவை என்று கேட்கப்பட்டபோது தனக்கு மிகவும் பிடித்தமான காலகட்டமான ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் படித்த நாட்களே என்று பதிலளித்தார் இவர். ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி வலியுறுத்தும் விழுமியங்கள் நிச்சயம் வாழ்க்கைக்குப் பயனுள்ளவையாக உள்ளதென இவர் குறிப்பிடுகிறார். மக்கள் நலனுக்காக செயல்படுவது குறித்து பள்ளி வாழ்க்கையின்போது கற்றுக்கொண்ட இவர், சமூகத்திற்கு மேலும் சிறந்த சேவையை இன்று ஆற்ற முடிகிறது என்கிறார்.
கொள்கை உணர்வுடன் இருந்ததால் தன்னால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர முடிந்ததாகவும் இவர் தெரிவிக்கிறார். ஆர்வம் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பள்ளி வலியுறுத்தியதால் ஜெயசுதா இன்று பல்வேறு துறைகளிலும் பணி
களிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். உதாரணமாக, தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் அவரின் ஆர்வத்தைப் பெருக்கிய இடமே ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளிதான் என்று அவர் பகிர்ந்து கொண்டார். ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி தமிழ் ஆசிரியர், தனது தமிழை மெருகூட்டி தான் தமிழில் சிறந்து விளங்க வழிவகுத்ததாகக் கூறுகிறார் ஜெயசுதா. கட்டுரைப் போட்டிகள், விவாதப் போட்டிகள், தன்னைவிட இளைய மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்புகள் போன்றவற்றால் தனக்கு தமிழின்பால் ஈடுபாடு அதிகரித்ததாக நினைவுகூர்ந்தார். அன்று ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி தன்னுள் விதைத்த தமிழார்வமே, இன்று தமிழ் சமூகத்திற்குப் பெரிதளவில் பங்காற்ற தனக்கு உற்சாகம் அளித்துள்ளது என்கிறார்.
"நாம்தான் மாற்றத்தின் விதைகள் - தமிழ் அடையாளத்தைப் பரந்த உலகிற்குக் கொண்டு செல்வதை உறுதி செய்வது நம் கடமை," என்று திருமதி ஜெயசுதா தமிழ் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் எப்படி அனைவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து எவ்வாறு முன்வந்தார்களோ அதேபோல, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என ஜெயசுதா கூறினார். சாதனை புரியும்போது நம் வாழ்க்கையில் துணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சகோதரர்கள், பயின்ற பள்ளி, தமிழ் சமுதாயம் ஆகிய எந்தத் தரப்பையும் மறக்காமல் நன்றிக்கடனுடன் இருப்பது முக்கியம் என்கிறார் இவர்.

