சுயேச்சைப் பள்ளிகள் அல்லது நிபுணுவத்தும் பெற்ற சுயேச்சைப் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த மாணவர்கள் தங்கள் செலவுகளைச் சமாளிக்க கூடுதல் உதவி பெறுவார்கள்.
கல்வி அமைச்சு வழங்கிவரும் அப்லிஃப்ட் உபகாரச்சம்பளத்தின்கீழ் அளிக்கப்படும் தொகை உயரும். முன்பு $800 வெள்ளி ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில் இவ்வாண்டிலிருந்து அத்தொகை $1,000ஆக உயரும்.
மேலும், உபகாரச்சம்பளத்துக்குத் தகுதிபெறுவதற்கான அதிகபட்ச குடும்ப வருமானம் உயர்த்தப்படும். இவ்வாண்டிலிருந்து $4,400 மாதாந்திர நிகர குடும்ப வருமானம் அல்லது $1,100 தனிநபர் வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உபகாரச்சம்பளத்துக்குத் தகுதி பெறுவர். முன்பு அது அதிகபட்சம் $2,750 மாதாந்திர குடும்ப வருமானம் என்றும் $690 தனிநபர் வருமானம் என்றுமிருந்தது.
அப்லிஃப்ட் உபகாரச்சம்பளம் சிங்கப்பூர் குமடிக்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களால், ஆண்டுக்கு மேலும் 230 மாணவர்கள் பயன்பெறுவர் என்று கல்வி அமைச்சு கூறியது. தற்போது ஆண்டுக்கு சுமார் 470 மாணவர்கள் அந்த உதவியைப் பெற்று வருகின்றனர்.
"இன்னும் அதிகமான தகுதிபெறும் மாணவர்கள் அப்லிஃப்ட் உபகாரச்சம்பளத்தின் மூலம் பயன்பெறவும் அவர்களின் பல்வகைத் திறன்களுக்கு கைகொடுக்கவும் இந்த மாற்றங்கள் உதவும் என்று நம்புகிறோம்," எனக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
நிதிப் பிரச்சினையால் சுயேச்சைப் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கத் தயங்கும் மாணவர்களுக்கு கூடுதல் நிதி உதவி அளிப்பது உபகாரச்சம்பளத்தின் நோக்கம். சிங்கப்பூரின் சிறந்த பள்ளிகளில் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமாகப் படிக்கின்றனர் என்று கவலை எழுந்துள்ள நிலையில், அப்பள்ளிகளில் பன்முகத்தன்மையை அதிகரிக்க அதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

