நியூசிலாந்தில் கடும் மழை காரணமாக அந்நாட்டின் ஆக்லாந்து விமான நிலையம் சென்ற வார முடிவில் மூடப்பட்டது.
ஏர் நியூசிலாந்து விமான நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்த சுமார் 9,000 அனைத்துலகப் பயணிகள், ஆக்லாந்து விமான நிலையம் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டனர்.
சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. விரக்தி அடைந்த பயணிகள் பலரும் சமூக ஊடகங்களில் மனக்குறையை, சங்கடத்தை வெளிப்படுத்தினர்.
அதேவேளையில், விமானங்களில் பயணிகளைக் கொண்டு செல்ல 24 மணி நேரமும் ஏர் நியூசிலாந்து செயல்பட்டது.
சிங்கப்பூரில் அந்த நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டு ஆக்லாந்து செல்லும் எஸ்ஐஏ விமானத்தைப் பெரிய விமானமாக மாற்றி விடும்படி கேட்டுக்கொண்டது.
அந்த விமானம் நேற்று இரவு 10.25 மணிக்குப் புறப்பட்டது.
ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் வாடிக்கையாளர், விற்பனைத் துறை தலைமை அதிகாரி லீன் ஜெராட்டி இதன் தொடர்பில் அறிக்கை வெளியிட்டார்.
சிங்கப்பூருக்கு வருகின்ற, இங்கிருந்து செல்கின்ற ஏர் நியூசிலாந்து பயணிகளுக்காக ஏறக்குறைய 200 இருக்கைகளை எஸ்ஐஏ அதிகப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

