திருப்பதி: திருப்பதி கோயிலில் நான்கு அடுக்கு பாதுகாப்பை மீறி மாட வீதி வழியாக புஷ்கரணி மண்டபம் வரை ஒரு கார் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து முக்கிய விருந்தினர் மற்றும் அதிமுக்கிய விருந்தினர்கள் கார் நிறுத்தும் இடங்களுக்கும் அந்த கார் சென்றுள்ளது.
அங்கு இருந்த சிலர், கார் ஓட்டுநரிடம் விசாரித்தபோது இந்த கார் அமைச்சரின் கார் என்றும் பின்னர் இல்லை வேறு ஒருவருடையது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தச் சம்பவம் பாதுகாப்பு குறை பாடுகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.
பிரதான வாயிலிலிருந்து மாட வீதிக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பை மீறித்தான் செல்ல வேண்டும். விஐபி மற்றும் வி.வி.ஐ.பி.களின் கார்கள் ராம் பகிச்சா எதிரே உள்ள பார்க்கிங் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்த கார் மட்டும் பாதுகாப்பு விதிகளை மீறி எப்படி மாட வீதிக்கு சென்றது என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பலத்த பாதுகாப்பையும் மீறி தனியார் நிறுவனத்தினர் ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து ஏழுமலையான் மூலவர் கோபுரம் வரை வானூர்தி கேமரா மூலம் காணொளியைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால் பக்தர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது பாதுகாப்பை மீறி கார் சென்றது குறித்து முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி, திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்க வந்த கார் வழி தவறி மாட வீதிகளில் சென்று இருக்கலாம். பாதுகாப்பு அதிகாரிகள் எப்படி மாட வீதிக்கு காரை அனுமதித்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்கும் விதமாக 'ஆக்டோபஸ்' படையைச் சேர்ந்தவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

