வழக்கமான மின்மோட்டார் சைக்கிள்களில் தேவைக்கேற்ப மின்கலனுக்கு மின்னூட்டம் செய்யவேண்டும். அதற்குச் சில மணி நேரம் பிடிக்கும். மின்னூட்டம் முடியும்வரை வாகனத்தைப் பயன்படுத்த இயலாது.
இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வுகாண சிங்போஸ்ட் நிறுவனமும் 'மோ பேட்டரிஸ்' நிறுவனமும் இணைந்துள்ளன.
மின்னாற்றல் தீர்ந்தால் அந்த மின்கலனைக் கொடுத்துவிட்டு மின்னூட்டம் செய்யப்பட்ட மின்கலனை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். மூன்று நிமிடங்களில் வாகனம் பயணத்தைத் தொடரத் தயாராகிவிடும்.
இத்தகைய மின்மோட்டார் சைக்கிள்கள் தற்போது சோதிக்கப்படுவதாக இரு நிறுவனங்களும் நேற்று அறிவித்தன. நிலப் போக்குவரத்து ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
நியூட்டன், ஆர்ச்சர்ட், தங்ளின், புக்கிட் தீமா ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டாரம் 9, 10 ஆகிய பகுதிகளில் அஞ்சல் விநியோகச் சேவைக்குப் புதிய வகை மின்மோட்டார் சைக்கிள்கள் இரண்டு சோதிக்கப்படுகின்றன.
அடுத்த மூன்று மாதங்களுக்கு சோதனை முயற்சி நீடிக்கும். இந்த காலகட்டத்தில் புதிய வகை மின்மோட்டார் சைக்கிள்களையும் அவற்றுக்கான மின்னூட்டச் சேவைகளையும் 'மோ பேட்டரிஸ்' நிறுவனம் வழங்கும் என்று சிங்போஸ்ட் தெரிவித்தது.
புதிய ரக மின்மோட்டார் சைக்கிள்களின் மின்னூட்ட வசதி, எரிபொருள் ஆற்றல், அவற்றை எளிதாகப் பயன்படுத்த முடிகிறதா போன்ற அம்சங்கள் மதிப்பிடப்படும்.
சிங்போஸ்ட் 2026ஆம் ஆண்டுக்குள் அஞ்சல் விநியோகத்திற்கு மின்மோட்டார் சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்தக் கடப்பாடு தெரிவித்துள்ளது. அதன் தொடர்பில் இந்தச் சோதனை முயற்சி முக்கியத்துவம் பெறுவதாக சிங்போஸ்ட் கூறியது.

