ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் உள்ள கடைத்தொகுதி ஆகஸ்ட் 6ஆம் தேதி மூடப்படும்
ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் இருக்கும் ஜேகியூப் கடைத்தொகுதிக் கட்டடம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மூடப்படும். அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் 40 மாடி குடியிருப்புக் கட்டடம் எழும்.
புதிய கட்டடத்தின் முதலாம், இரண்டாம் மாடிகளில் கடைகள் இருக்கும். அது 2027ல் கட்டி முடிக்கப்படும்.
ஜூரோங் லேக் வட்டாரத்தில் புதிய வீடுகளையும் நிறுவனங்களையும் பொழுதுபோக்கு வசதிகளையும் இதர பல வசதிகளையும் ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டமாக இருக்கிறது.
அந்தத் திட்டத்திற்கு உறுதுணையாகத் திகழும் வகையில் ஜேகியூப் கடைத்தொகுதி இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புக் கட்டடம் கட்டப்படுகிறது.
கேப்பிட்டலேண்ட் டெவலப்மெண்ட் நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றில் இந்த விவ ரங்களைத் தெரிவித்தது.
ஜேகியூப் கடைத்தொகுதி ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு 10 மணிக்கு மூடப்படும். அங்கு இப்போது தொழில் நடத்தும் குத்தகை யாளர்களுடன் இந்த நிறுவனம் அணுக்கமாகச் செயல்பட்டு அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகிறது.
இதன் மூலம் குத்தகையாளர்கள் பிரச்சினை எதுவுமின்றி இடத்தை ஒப்படைக்க வழி ஏற்படுத்தப்படும்.
புதிதாக கட்டப்படும் குடியிருப்புக் கட்டடம் ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி முனையத்துடன் நேரடியாக இணைக்கப்படும்.
ஜூரோங் லேக் வட்டாரத்தில் அமையவிருக்கும் கூரையுடன் கூடிய மேல்மட்ட நடைபாதை கட்டமைப்பாக உருவாகும் ஜே-வாக் வழியாக வெஸ்ட்கேட், ஐஎம்எம் கட்டடம் ஆகியவற்றுக்கு அந்தப் புதிய குடியிருப்புக் கட்டடத்தில் இருந்து வசதியாகச் செல்லலாம்.
ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி முனையம், கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு வழித்தடங்களுக்குச் சேவையாற்றுகிறது.
அது, எதிர்காலத்தில் அமையக்கூடிய ஜூரோங் வட்டார வழித்தடத்துடன் இணைக்கப்படும். இந்த வட்டார வழித்தடம் 2027 முதல் கட்டம் கட்டமாகச் செயல்படத் தொடங்கும்.
ஜூரோங் ஈஸ்ட் முனையம், 2030 முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படவுள்ள குறுக்குத் தீவு வழித்தடத்திற்கும் சேவைஆற்றும். 'ஜூரோங் ஈஸ்ட் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்' என்ற அதிநவீன வளாகத்துடன் அந்தக் குடியிருப்புக் கட்டடம் இணைக்கப்படும்.
அந்த மையத்தில் குளிரூட்டி வசதி உள்ள பேருந்து முனையம், பொது நூலகம், சமூக மன்றம், விளையாட்டு நிலையம் உள்ளிட்ட பல வசதிகளும் இருக்கும்.
ஜூரோங் லேக் வட்டாரம், மத்திய வட்டாரத்திற்கு வெளியே சிங்கப்பூரின் ஆகப் பெரிய தொழில்துறை வட்டாரமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது 2040, 2050 ஆண்டுகளுக்கு இடையில் 20,000 புதிய வீடுகளுடன் திகழும். நூறாயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

