பொது வீடமைப்பு சிங்கப்பூரர்களுக்கு அணுக்கமான ஓர் அம்சம் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
கொவிட்-19 கிருமிப் பரவலால் விற்பனைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டது. 'பிடிஓ' வீடுகளுக்குக் காத்திருக்கும் நேரம் அதிகரித்தது. மறுவிற்பனை வீட்டு விலையும் அதிகரித்துள்ளது. இதனால் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைத் திட்டங்களை மாற்றிக்கொள்ள நேரிட்டது. வீடு எப்போது கிடைக்கும், கட்டுப்படியான விலையில் கிடைக்குமா போன்ற கவலைகள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளன என்று பிரதமர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் அவரது சகாக்களும் இதன் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளனர். பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளது. தீர்வுகாண்போம் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார் அவர்.
சிங்கப்பூரர்கள் யாரும் சொந்த வீடு குறித்து எக்காலத்திலும் கவலைப்படத் தேவையிருக்காது என்றார் திரு லீ. அடுத்தடுத்த தலைமுறையினர்க்கும் இது சாத்தியமாகும் வகையில் நடவடிக்கைகள் தொடரும் என்றார் அவர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு வாங்கத் திட்டமிடுவோர் கழகத்தின் இணையத்தளத்தில் அதுகுறித்த விவரங்களைப் பெற்றுக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

