வடக்கு-தெற்கு ரயில்பாதையில் நேற்றுக் காலை உச்ச நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. ஏறக்குறைய 25 நிமிடங்கள் வரை நீண்ட தாமதத்திற்கு, தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணம் என்று கூறப்பட்டது.
மூன்று நாள்களில் இரண்டாவது முறையாக இந்த ரயில்பாதையில் காலை உச்ச நேரத்தில் இவ்வாறு தாமதம் ஏற்பட்டது. செம்பவாங் ரயில் நிலையத்திற்கும் அட்மிரல்டி ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில்கள் தடம் மாறுவதற்கான விசையில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
நேற்றுக் காலை 6.45 மணிக்கு இவ்வாறு நேர்ந்ததாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
பொறியாளர்கள் நேரில் சென்று சரிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நிறுவனம், கோளாறு கண்டுபிடிக்கப்பட்ட உடன் பாதுகாப்பு கருதி ரயில்கள் மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்ததாகக் கூறியது.
இதனால் பயண நேரத்தில் 25 நிமிடங்கள் அதிகரிக்கக்கூடும் என்று பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
நேற்றுக் காலை ஏற்பட்ட கோளாற்றுக்கும் கடந்த திங்கட்கிழமை ரயில் தடத்தில் ஏற்பட்ட கோளாற்றுக்கும் தொடர்பில்லை என்று எஸ்எம்ஆர்டி கூறியது.
நேற்றுப் பிற்பகல் 12.40 மணியளவில் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

