சிங்கப்பூரில் குற்றவாளிகள் என்று ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்டு பிறகு 2017ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 10 பேரில் சுமார் நான்கு பேர் வெளியே வந்து ஐந்தாண்டுகளுக்குள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீண்டும் கைதாகி சிறைத்தண்டனை பெற்றனர். அல்லது ஒருநாள் முன்னிலையாகும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அப்படி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் என்று சிங்கப்பூர் சிறைச்சாலைகள் சேவைத் துறை புள்ளிவிவரங்கள் கூறின.
விடுதலையானோர் மீண்டும் குற்றச்செயல்களைச் செய்யும் இரண்டாண்டு விகிதம் 2020ல் 20.4% ஆக இருந்தது.
இது, 2019ஆம் ஆண்டின் அளவான 20.0%ஐவிட கொஞ்சம் அதிகம். 2019ஆம் ஆண்டின் அளவு 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவானது.
உலகத்திலேயே மிகக் குறைவான அளவுகளில் இது ஒன்று என்று சிறைத் துறை கூறியது.
இதனிடையே, கடந்த மூன்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தின் புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், போக்குவரத்து குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றவர்கள் அதிகம்.
11 பேர் தூக்கிலிடப்பட்டனர்
இந்த எண்ணிக்கை 2022ல் 984 ஆகவும் இருந்தது. 2021ல் 819 ஆகவும் 2020ல் 734 ஆகவும் இது இருந்தது. போதையர் மறுவாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்ற மொத்த குற்றவாளிகள் எண்ணிக்கை 2022ல் 3,337 ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய ஈராண்டு அளவைவிட அதிகம்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் 11 பேருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர்களில் மலேசியரான நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவர் ஒருவர். 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை 2019ல் கொண்டுவந்ததற்காக இவருக்கு 2010ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் யாரும் தூக்கிலிடப்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவருமே போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைச் செய்தவர்கள். 2007 முதல் தூக்குத்தண்டனை பதிவேடு நடைமுறையில் உள்ளது.
அதன்படி, 2018ல் 13 பேருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு சென்ற ஆண்டில்தான் ஆக அதிகமாக 11 பேர் தூக்கிலிடப்பட்டனர். 2020, 2021ஆம் ஆண்டுகளில் யாருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இதற்கு கொவிட்-19 காரணம் அல்ல. நிலுவையில் இருக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் முதலான பல காரணங்கள் உள்ளன.
இவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்பட்ட பிறகே தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும்.
சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை நடைமுறையில் இருப்பதற்கு மக்களிடம் வலுவான ஆதரவு உள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் 2022 செப்டம்பரில் தெரிவித்தார்.
வேண்டுமென்றே கொலை செய்வது, துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது, போதைப்பொருளைக் கடத்துவது போன்ற மிகக் கடுமையான குற்றச்செயல்களுக்கு அத்தண்டனை தேவை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

