கொவிட்-19 கட்டுப்பாடுகள் அகலுவதால் 'டிரேஸ்டுகெதர்' செயலியை தங்கள் கைப்பேசியில் இருந்து குடியிருப்பாளர்கள் இனிமேல் அகற்றிவிடலாம்.
நிறுவனங்கள் 'சேஃப்என்ட்ரி' செயலி பயன்பாட்டை நிறுத்திவிடலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இருந்தாலும் தேவை எனில் மறுபடியும் பதிவிறக்கம் செய்து கொள்ளத் தோதாக இந்தச் செயலிகள் தொடர்ந்து அவற்றுக்கான சேமிப்பு இடங்களில் இருந்து வரும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று நடந்த கொவிட்-19 பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, டிரேஸ்டுகெதர் கருவியை வைத்திருப்போர் அவற்றை வரும் திங்கள் முதல் மார்ச் 12 வரை 108 சமூக நிலையங்களிலும் மன்றங்களிலும் திருப்பி ஒப்படைக்கலாம்.
அவற்றை ஒப்படைத்தால்தான் அதைப் புதுப்பித்து தேவைப்படுவோருக்கு மறுபுழக்கத்திற்குவிட ஏதுவாக இருக்கும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
கிருமி தொற்றியிருப்போர் இனிமேல் டிரேஸ்டுகெதர் தகவல்களைத் தாக்கல் செய்ய வேண்டாம். சேஃப்என்ட்ரி தகவல்களும் இனி சேகரிக்கப்படாது என்றும் அமைச்சு தெரிவித்தது.
இருந்தாலும் 2020 மே மாதம் நிகழ்ந்த ஒரு கொலை விவகாரம் தொடர்பான டிரேஸ்டுகெதர் தகவல்கள் காலவரம்பின்றி வைத்துக்கொள்ளப்பட்டு இருக்கும் என்றும் சுகாதார அமைச்சு கூறியது.

