இவ்வாண்டின் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழின் சிறந்த சிங்கப்பூர் விருது, பழைய கார் விற் பனையாளரான ஆன்சன் இங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேவைப்படுவோருக்கு உணவு வழங்கும் அறப்பணி அமைப்பு ஒன்றை உருவாக்கி அவர் உதவி வருகிறார்.
முன்பின் அறியாத, மரணப் படுக்கையில் கிடக்கும் முதியோர்களின் கடைசி ஆசையையும் அவர் நிறைவேற்றி வருகிறார்.
இறுதிச் சடங்கு செய்யவும் அவர் பணம் கொடுத்து உதவி செய்து வருகிறார்.
சிங்கப்பூர் ராஃபிள்ஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவருக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
இவ்வாண்டு எஸ்டி சிங்கப்பூரர் விருதுக்கு முன்மொழியப்பட்டவர்களில் சிலர் தங்கள் உடல்நலப் பிரச்சினையுடன் போராடும் அதே வேளையில் அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து உதவி வருவதை அதிபர் ஹலிமா விழாவில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டினார்.
மனிதாபிமான உதவி என்ற பொது எண்ணத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வலிமையுடன் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சரண்ஜித் சிங் வாலியா மற்றும் பிரிவின் சுராஜ் சாந்தகுமார் ஆகியோர் போலந்தில் ஒன்றாகச் சேர்ந்து ரஷ்யா-உக்ரேன் போரில் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்துள்ளனர்.
தன்னலமின்றி சேவையாற்றும் தனிச்சிறப்புமிக்க சிங்கப்பூரருக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாட்டில் யுபிஎஸ் சிங்கப்பூர் விருதுகளை வழங்கி வருகிறது. இவ்வாண்டு 8வது முறையாக எஸ்டி சிறந்த சிங்கப்பூரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

