2023ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றமும் அடிக்கடி மாறும் வானிலையும் தென் கிழக்கு ஆசியா எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்று சிங்கப்பூரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் மற்ற ஆசியான் நாடுகளில் வேலையின்மை, பணவீக்கம், வாழ்க்கைச் செலவினம், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்படும் நெருக்கடி போன்றவை கொவிட்-19 கொள்ளைநோய்க்கு அடுத்து பெருங்கவலைகளாக விளங்குகின்றன.
தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம்-யூசோப் இஷாக் கல்விக் கழகம் மேற்கொண்ட 'தென் கிழக்கு ஆசியாவின் 2023ஆம் ஆண்டின் நிலை' என்ற ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து உறுப்பு நாடு களிலிருந்து 1,308 பேர் ஆய்வில் பங்கேற்றனர். அவர்களில் 59.5 விழுக்காட்டினர் வேலையின்மை, பொருளியல் மந்தம் ஆகியவை பருவநிலை மாற்றத்தைவிட கவலையளிப்பதாகத் தெரிவித்து உள்ளனர். இதற்கு அடுத்ததாக 57.1 விழுக்காட்டினர் பருவநிலை மாற்றம் குறித்து கவலை கொள் கின்றனர்.
அதிகரித்து வரும் சமூக-பொருளியல் இடைவெளி, வருமான ஏற்றத்தாழ்வு போன்றவை அதிகரிக்கும் ராணுவப் பதற்றத்துடன் மூன்றாவது கவலைகளாக இருக்கின்றன.
ஆய்வில் பங்கேற்ற சிங்கப்பூரர்களில் 60 விழுக்காட்டினருக்கு மேல் பருவநிலை மாற்றத்தை மிகப்பெரிய பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக அமெரிக்கா-சீனா பூசல், சமூக-பொருளியல் இடைவெளி, வருமான ஏற்றத்தாழ்வு ஆகியவை முக்கிய கவலைகளாக உள்ளன.
கல்விமான்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், வர்த்தகப் பிரதிநிதிகள், குடிமைச் சமூகம், அரசாங்க சார்பற்ற அமைப்புகள், ஊடகப் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், வட்டார மற்றும் அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஆய்வில் கலந்துகொண்டனர்.
ஆய்வில் முக்கிய கண்டுபிடிப்பாக 82.6 விழுக்காட்டினர் ஆசியானை வலுவற்ற அமைப்பாகக் கருதுகின்றனர். அரசியல் மற்றும் பொருளியல் மாற்றங்களை சமாளிக்க முடியாததை அவர்கள் காரணமாகச் சுட்டிக் காட்டியுள்ளனர். சிங்கப்பூரில் மட்டும் இன்னும் கூடுதலாக 89.9 விழுக்காட்டினர் ஆசியான் அமைப்பை பலவீனமாகக் கருதுகின்றனர்.
இவ்வட்டாரத்தில் சீனா தொடர்ந்து செல்வாக்கு வாய்ந்த பொருளியல் சக்தியாகப் பார்க்கப்படுகிறது, இதற்கு அடுத்த நிலையில் அமெரிக்கா உள்ளது. ஆனால் சீனாவுக்கான 59,9% ஆதரவு, 2022 கணக்கெடுப்பில் தென்பட்ட 76.7%லிருந்து குறைந்துள்ளது.

