வியட்னாமில் கூட்டாக மேலும் ஐந்து தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று சிங்கப் பூரில் பட்டியலிடப்பட்டுள்ள செம்ப்கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனுடன் சேர்த்து வியட்னாம்-சிங்கப்பூர் கூட்டு ஒத்துழைப்பில் இயங்கும் மொத்த தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 17க்கு அதிகரிக்கிறது.
வியட்னாம் அரசாங்கத்துக்குச் சொந்தமான 'பிகேமெக்ஸ் ஐடிசி' எனும் நீண்டகாலப் பங்காளியுடன் புதிய தொழிற்பேட்டைகள் கட்டப்படும்.
வியட்னாம் பிரதமர் சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ள சமயத்தில் புதிய கூட்டு தொழிற்பேட்டைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று அறிவிக்கப்பட்டது.
வியட்னாமுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள பொருளியல் ஒத்துழைப்பின் முக்கிய அங்கமாக வியட்னாம்-சிங்கப்பூர் தொழிற்பூங்கா 1996ஆம் ஆண்டில் முதல் முறையாகக் கட்டப்பட்டது.
இதையடுத்து 12 தொழிற்பேட்டைகள் வியட்னாமின் வடக்கு, மத்திய, தெற்கு வட்டாரங்களில் தற்போது செயல்பட்டு வருகின்றன.
ஏறக்குறைய 17 பில்லியன் யுஎஸ் டாலர் ($22.6 பில்லியன்) முதலீடுகளை ஈர்த்துள்ள இவை, 300,000 வேலைகளை உருவாக்கியிருக்கின்றன.
இந்நிலையில் புதிதாகக் கட்டப்படும் வியட்னாம்-சிங்கப்பூர் தொழிற்பேட்டைகள் விவேகத் துடன் நீடித்த நிலைத்தன்மைமிக்கதாக கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது குறைந்த கரிம வெளியேற்றத்தைக் கொண்டிருக் கும். மின்சக்திக்கு கட்டடக் கூரைகளில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும் என்று செம்ப்கார்ப் தெரிவித்தது.
எரிபொருள், தண்ணீர் பயன்பாடு, போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க தொலைதூரக் கண்காணிப்புச் சாதனங்கள் செயல்படும் என்றும் அது கூறியது.
வியட்னாம்-சிங்கப்பூர் தொழிற்பூங்கா குழுமத்தின் இணைத் தலைவரும் செம்ப்கார்ப் மேம்பாட்டின் தலைமை நிர்வாகியுமான கெவின் டியோ, 2023ஆம் ஆண்டு 50 ஆண்டுகால இரு தரப்பு அரசதந்திர உறவையும் சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையிலான பத்து ஆண்டு உத்திபூர்வ பங்காளித்துவத்தையும் குறிக்கிறது என்றார்.
"வியட்னாமுக்கான எங்களுடைய கடப்பாடு ஆழமானது, வலுவானது," என்றும் அவர் கூறினார்.
2022 மே மாத நிலவரப்படி 94.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளுடன் வியட்னாமின் 2வது ஆகப்பெரிய முதலீட்டாளராக சிங்கப்பூர் விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

