2023ல் வரி செலுத்துவோரில் பத்தில் எட்டுப் பேரின் வருமான விவரம் தானாகவே நிரப்பப்பட்டு தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட தனிநபர்களின் வருமான வரி இவ்வாறு தாக்கல் செய்யப் படுவதாக உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்தது.
இவ்வாண்டு 100,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், வருமானத்தைத் தானாக சேர்த்துக் கொள்ளும் திட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளன.
இம்முறை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிறுவனங்கள் தானாக சேர்த்துக்கொள்ளும் திட்டத்தில் சேர்ந்துள்ளதால் முன்கூட்டியே நிரப்பப்பட்ட படிவத்தை முதலாளிகள் எளிதில் தாக்கல் செய்யலாம். மார்ச் 1ஆம் தேதிக்குள் முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களின் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்நாட்டு வருவாய் ஆணையம் நினைவூட்டியுள்ளது.
ஏறக்குறைய 1.7 மில்லியன் வரி செலுத்துவோர், அதாவது பத்தில் ஏழு பேர் வருமான விவரப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. ஆனால் தங்களுடைய வருமான விவரங்களை சரி பார்ப்பது நல்லது. வரிச்சலுகைகள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள லாம் என்று ஆணையம் கூறியது.
வரிப் படிவம் நிரப்ப அவசியமில்லாத 1.7 மில்லியன் வரி செலுத்துவோர் நேரடி வருமான வரி மதிப்பீட்டின் கீழ் வருகின்றனர். இவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு இல்லாமல் வருமான வரிக் கட்டணம் பற்றிய விவரம் அனுப்பி வைக்கப்படும். வருமான வரிக் கட்டணம் கிடைத்த பிறகும் வரி செலுத்துவோர் தங்களுடைய வருமான விவரங்களில் உள்நாட்டு வரு வாய் ஆணைய இணையத்தின் வழியாக மாற்றம் செய்ய முடியும் என்று ஆணையம் கூறியது. ஆனால் வரிக்கட்டணம் கிடைத்த முப்பது நாள்களுக்குள் மாற்றத்தைச் செய்ய வேண்டும்.

