அபாயம் நிறைந்த இடங்களில் அமலாக்கப்பட்ட உயர்மட்டப் பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
வேலையிடங்களில் மரணங்களை ஏற்படுத்தும் விபத்துகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதால் அதனைக் குறைப்பதற்காக பாதுகாப்புக் காலத்தை நீட்டிப்பதாக மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அபாயமுள்ள வேலையிடங்களில் ஆறு மாதக் காலத்திற்கு உயர்மட்ட பாதுகாப்பு அம்சங்களை அமைச்சு நடைமுறைப்படுத்தியது. இது, இம்மாதம் 28ஆம் தேதி காலாவதியாகவிருந்தது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு மே மாதம் வரை உயர்மட்டப் பாதுகாப்பு நடைமுறைகள் நீடிக்கும் என்று அமைச்சு கூறியுள்ளது.
மரணம் அல்லது மோசமான காயம் ஏற்படும் அளவுக்கு வேலையிடப்பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்கப்படும்.
அதிகபட்ச அபராதமாக 50,000 வெள்ளி விதிக்கப்படும். இதற்கு முன்பு 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் உயர்மட்டப் பாதுகாப்பு நடைமுறைகள் நீட்டிக்கப்பட்ட காலத்தில் கூடுதல் நடவடிக்கைகளும் நடப்புக்கு வந்துள்ளன.
வேலையிடங்களில் மோசமான விபத்து அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டால் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அல்லது இயக்குநர்கள் கட்டாய அரை நாள் பயிற்சிக்குச் செல்வது கூடுதல் நடவடிக்கைகளில் அடங்கும்.
உயர்மட்ட பாதுகாப்பு நடைமுறைகள் அமலில் இருந்த காலத்தில் வருடாந்திர வேலையிட உயிர்ச்சேதம் குறைந்ததால் அமைச்சு மேலும் மூன்று மாதங்களுக்கு இந்நடைமுறைகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. அதாவது, 2022 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் 1.5 விகிதமாக இருந்த உயிர்ச்சேதம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 0.8 விகிதமாகக் குறைந்தது.
2022 முழுவதும் உயிர்ச்சேத விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 1.3ஆக இருந்தது.
ஆனால் 2022ல் பெரிய விபத்துகளை ஊழியர்கள் சந்தித்தனர் என்று மனிதவள அமைச்சு குறிப் பிட்டது.
நூறாயிரம் ஊழியர்களுக்கு 16.8ஆக இருந்த பெரிய விபத்து களுக்கான விகிதம் 18.7க்கு அதிகரித்தது.
எனினும் பாதுகாப்புக் காலம் எல்லாத் துறைகளிலும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற் படுத்தவில்லை.
கட்டுமானத் தளங்களில் மாதாந்திர சராசரி உயிர்ச்சேத, மோசமான காயத்தை ஏற்படுத்தும் விபத்துகள் குறைந்து நிலைமை மேம்பட்டுள்ளது.
என்றாலும் போக்குவரத்து, சேமிப்பகங்களில் நிலைமை மேம்படவில்லை. இத்துறைகளில் அதிக விபத்துகள் பெரிய காயத்தை ஏற்படுத்தும் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

