வீடுகளைக் கட்டி விற்பவர்களில் பெரும்பாலானவர்கள் புதிய தனியார் வீடுகளின் விலை உயராது என்றே கருதுகிறார்கள். சொத்துச் சந்தை நடத்திய காலாண்டு ஆய்வு இவ்வாறு தெரிவிக்கிறது.
அடுத்த ஆறு மாதங்களில் புதிய வீடுகளின் விலையில் மாற்றம் இராது என்று சென்ற ஆண்டு நான்காவது காலாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்ட வீடு கட்டி விற்போரில் 71 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
இந்த அளவு 3வது காலாண்டு ஆய்வின்போது 33% ஆக இருந்தது. புதிய வீடுகளின் விலைகள் கொஞ்சம் உயரும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 29 விழுக்காட்டினர் கூறினர்.
விலைகள் உயரும் என்று மூன்றாவது காலாண்டு ஆய்வில் 56 விழுக்காட்டினர் எதிர்பார்த்திருந்தனர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நிலச் சொத்து நகர ஆய்வுப் பயிலகம் அந்த ஆய்வை நடத்தியது.
அடுத்த ஆறு மாத காலத்தில் விற்பனைக்கு விடப்படும் புதிய வீடுகளின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக அல்லது கணிசமான அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று சுமார் 47 விழுக்காட்டினர் எதிர்பார்க்கிறார்கள்.

