குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களால், 16 வயதுக்கும் குறைந்த சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவங்களின் எண்ணிக்கை 2019லிருந்து 2021ல் 61% ஆகக் கூடி இருக்கிறது.
உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் இந்தப் புள்ளிவிவரங்களைச் சென்ற திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினருக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.
கடந்த 2021ல் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 247 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2020ல் 186 ஆகவும் 2019ல் 153 ஆகவும் இருந்தது.
சென்ற ஆண்டு ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடையே இத்தகைய 190 சம்பவங்கள் நிகழ்ந்தன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2021ஆம் ஆண்டில் சிறார் கொடுமை தொடர்பான 2,141 சம்பவங்கள் பற்றி புலன்விசாரணை நடத்தியது.
இந்த எண்ணிக்கை 10 ஆண்டுக் காலத்தில் ஆக அதிகமானதாகும். 2020ஆம் ஆண்டின் எண்ணிக்கையைவிட இது 63% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறார்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள், பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள், அலட்சியப்படுத்தப்பட்ட விவகாரங்கள் போன்றவை இவற்றில் அடங்கும்.
இதனிடையே, சிறார்கள் குடும்ப உறுப்பினர்களையே அதிகம் சார்ந்து இருக்கிறார்கள் என்பதால் தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி புகார் தெரிவிப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது என்று மாதர் செயலாய்வுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி கொரினா லிம் கூறினார்.
பாதிக்கப்படுவோரின் விவரங்களை வெளியிட முடியாத அளவுக்குத் தடை உத்தரவு இருக்கும் என்பதால் கொடுமைக்கு இலக்காகக்கூடியவர்கள் பயப்பட வேண்டிய தேவை இல்லை என்று 'இன்விக்டஸ் லா கார்ப்ப ரேஷன்' என்ற அமைப்பைச் சேர்ந்த கோரி வோங் என்ற வழக்கறிஞர் தெரிவித்தார்.
பாதிக்கப்படுவோர் பள்ளிக்கூடங்களிலும் உதவி நாடலாம் என்றார் அவர். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தத்தெடுப்புத் திட்டம் நடப்பில் இருக்கிறது.
தத்தெடுக்கும் குடும்பங்கள், கொடுமைக்கு ஆளான சிறார்களுக்குப் பாதுகாப்பு, உறைவிட வசதிகளைச் செய்துகொடுக்கின்றன என்பதையும் அவர் சுட்டினார்.
காவல்துறை இந்த ஆண்டில் பாலியல் குற்றச்செயல் குடும்ப வன்செயல் தளபத்தியம் ஒன்றை புதிதாக அமைக்கவிருக்கிறது.
அந்தத் தளபத்தியம் பாலியல் குற்றச்செயல்கள், குடும்ப வன்செயல் சம்பவங்கள் அனைத்தையும் மேற்பார்வையிடும்.
மிகவும் ஆற்றல் வாய்ந்த அதிகாரிகள் அந்தத் தளபத்தியத்தில் பணியில் இருப்பார்கள்.

