மோனலிசா
சிங்கப்பூர் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணி
களுக்கு விதித்திருந்த கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியதையடுத்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நேற்று காலை 11 மணியிலிருந்து இந்த நடைமுறை
அமலுக்கு வந்தது.
நாளை மறுநாள் சிங்கப்பூரி
லிருந்து பெங்களூருக்கு தன்னுடைய மனைவி மற்றும் மூன்று வயது மகளுடன் செல்கிறார் 34 வயது ஷாஜஹான் தாஜுதீன். சென்ற மாதமே இதற்காக விமான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்திருந்தவருக்கு கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் கலக்கத்தை ஏற்படுத்தியது.
அண்மையில் இவருடைய நண்பர் ஒருவர் இந்தியா செல்ல எடுத்த பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்படவே வேறுவழியின்றி பயணத் தேதிக்கு ஒருநாள் முன் அதை ரத்து செய்ய ஏற்பட்ட நிலை தன்னுடைய இந்தியா செல்லும் திட்டத்தை நிலையற்றதாக்கியது என்று தொண்டு நிறுவனம் ஒன்றில் மூத்த மேலாளராகப் பணி
புரியும் ஷாஜஹான் பகிர்ந்துகொண்டார்.
"12 வயதிற்குக் குறைவானவர் களுக்கு இப்பரிசோதனை தேவையில்லை என்பதால் நானும் என் மனைவியும் மட்டும் இப்பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தோம். மேலும் முன்னெச்சரிக்கையாக பயணக் காப்பீடும் எடுத்திருந்தோம். இச்சூழலில் நேற்று முதல் இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதோடு செலவையும் மிச்சப்படுத்தியுள்ளது," என்று கூறினார் ஷாஜஹான்.
முன்னதாக ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் இந்தியா செல்வோர், பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாது, பயணத்துக்கு முன்பு 'ஏர் சுவிதா' இணையத்தளத்தில் பரிசோதனை முடிவு களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் இந்தியா அறிவித்திருந்ததையொட்டி
பயணிகள் மிகுந்த சிரமத்திற்
குள்ளாயினர்.
கடந்த மாதம் சிங்கப்பூருக்கு தன் மனைவியுடன் வந்திருந்த திரு எச். ராமன் தன்னுடைய மனைவி எதிர்பாராத விதமாக கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனை முடிவுகளில் தெரிய வர, சிங்கப்பூரில் கூடுதலாக நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு தங்க வேண்டி இருந்தது.
"பரிசோதைனை நடவடிக்கைகள் மிகவும் கடினமாக இருந்தன. வேறுவழியின்றி பயணத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. இதனாலேயே சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் பலர் கோலாலம்பூர் வழியாகச் சென்றனர்," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் கூறினார் திரு எச். ராமன்.
தன்னுடைய மகன் தேசிய சேவைக்கு செல்வதற்கு முன் இந்தியாவிற்கு குடும்பமாக சென்று உறவினர்களைக் காண திட்டமிட்டிருந்த 43 வயது ஷோபா குமரேசன் திடீரென்று அறிவிக்கப்பட்ட இக்கட்டுப்பாடுகளால் செலவு அதிகமானதாகக் கூறினார்.
பொங்கல் பண்டிகையின்போது செல்ல எண்ணம் கொண்டிருந்த இவர், பயண நிறுவனம் மூலம் டிசம்பர் மாதமே விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்தார். பண்டிகையாதலால் அதிக விலையில் பயணச்சீட்டுகளை வாங்கியிருந்தார்.
திடீரென்று இந்தியா அறிவித்த பயணக் கட்டுப்பாடுகளால் குடும்பத்தில் உள்ள மூவருக்கும் சேர்த்து 'பிசிஆர்' பரிசோதனைக்காக $240 வெள்ளி கூடுதலாக செலவானதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
இவரைப் போலவே ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதை வழக்கமாய் கொண்டுள்ள வெளிநாட்டு ஊழியரான 43 வயது மணியன் ராமநாதன், கூடுதல் செலவைத் தவிர்ப்பதற்காக இம்முறை பயணத் திட்டத்தையே கைவிட்டதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதற்கிடையே சென்ற மாதம் இந்தியா தன்னுடைய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்த சூழலிலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் விமானங்களின் பயணிகளின் வரவில் பெரிதாக குறைவு ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

