சிங்கப்பூரில் சென்ற ஆண்டு தீச்சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும் தீச்சம்பவங்கள் சென்ற ஆண்டு குறைந்தன. சென்ற ஆண்டு 1,799 தீச்சம்பவங்கள் பதிவாயின. ஒப்புநோக்க 2021ல் இந்த எண்ணிக்கை 1,844.
சென்ற ஆண்டு தீச்சம்பவங்களில் ஆறு பேர் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு நால்வர் உயிரிழந்தனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று வெளியிட்ட வருடாந்தரப் புள்ளிவிவர அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சென்ற ஆண்டு தீயினால் மாண்டோரில் பாதிப் பேர் கடந்த மே மாதம் பிடோக் நார்த் வட்டார அடுக்குமாடி வீட்டில் மூண்ட தீயில் உயிரிழந்தவர்கள். அச்சம்பவத்தில் மூன்று வயதுச் சிறுமி, அவளது தந்தை உள்ளிட்ட மூவர் மாண்டனர்.
சென்ற ஆண்டு மார்ச்சில் நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் மூண்ட தீயில் ஒருவர் உயிரழ்ந்தார். அந்த வீட்டில் ஒன்பது பேர் கொண்ட குடும்பம் குடியிருந்தது.
மேலும் சென்ற ஆகஸ்டு மாதம் ஜூரோங் ஈஸ்ட் வட்டார வீட்டில் தீ மூண்டதால் 48 வயது ஆடவர் பலியானார்.
இந்த ஆறுபேர் தவிர்த்து, சென்ற ஆண்டு மேலும் இருவர் உயிரிழந்ததாகவும் ஆனால் அதுதொடர்பான விசாரணை இன்னும் நிறைவுபெறவில்லை என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சென்ற ஆண்டு, தீயினால் காயமடைந்தோர் எண்ணிக்கை குறைந்தது. 2022ல் குடியிருப்புக் கட்டடங்களில் 935 தீச்சம்பவங்கள் பதிவாயின. இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7.4 விழுக்காடு குறைவு.
இவற்றில் பெரும்பாலான சம்பவங்களுக்கு சமைக்கும்போது கவனமின்றி விடப்பட்ட உணவுவகைகளே காரணம்.
மின்னூட்டத்தின்போது தீ மூண்ட சம்பவங்கள் சென்ற ஆண்டு 18.8 விழுக்காடு கூடின. இவற்றில் பெரும்பாலனவை, மின் இணைப்பு வழங்கும் கம்பியில் கோளாறு அல்லது மின்கருவிகளில் ஏற்பட்ட கோளாறு போன்றவற்றால் நேர்ந்தவை.
மின்தூக்கி, மாடிப்படிகள், பொதுத் தாழ்வாரங்கள் போன்றவற்றில் முறையின்றி பொருள்களை வீசுவதால் தீ மூண்ட சம்பவங்கள் சென்ற ஆண்டு 31.7 விழுக்காடு குறைந்தன.
ஆனால், வாகனங்கள் தீப்பிடித்த சம்பவங்கள் 31.6 விழுக்காடு அதிகரித்தன. தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், மின்சைக்கிள்கள் உள்ளிட்டவை தீப்பிடித்த சம்பவங்கள் 2022ல் 33.3 விழுக்காடு குறைந்தன.
சென்ற ஆண்டு அவசர மருத்துவ உதவி கோரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை 20.2 விழுக்காடு உயர்ந்ததாகக் கூறப்பட்டது.
அவசரமற்ற உதவி அழைப்புகளும் சென்ற ஆண்டு 27.5 விழுக்காடு அதிகரித்தன. உயிருக்கு ஆபத்தான சூழல் இல்லாவிட்டால் 995 என்ற தொலைபேசி எண்ணை அழைப்பதைத் தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 13ஆம் தேதிமுதல் அவசர உதவி அழைப்புகள் முதலில் மதிப்பீடு செய்யப்படும். உண்மையான நெருக்கடி நிலவினால் மட்டுமே அவசர உதவி வாகனங்கள் அனுப்பப்படும். இந்நடைமுறை குறித்து குடிமைத் தற்காப்புப் படை 2022 ஜூனில் அறிவித்தது.

