வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து இங்கு விற்றுவருகிறது 'லிட்டில் ஃபார்ம்ஸ்' எனும் நிறுவனம்.
இது, குளிரூட்டப்பட்ட ஆட்டிறைச்சி, கடலுணவு வகைகள் போன்றவற்றை அதிகாரிகள் சோதனையிடுவதற்கு முன்பே விற்பனை செய்ய ஏற்பாடு செய்ததாகக் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுவனத்திற்கு $13,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரிகள் சோதனையிடுவதற்கும் சான்றிதழ் வழங்குவதற்கும் ஏதுவாக நிறுவனம் ஏற்பாடு செய்யத் தவறியதாக அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைச்சி, மீன் வகைகளை சிங்கப்பூருக்குக் கொண்டுவர விரும்பும் நிறுவனங்கள் இத்தகைய சோதனை முடிந்த பிறகே விற்பனை அல்லது விநியோகத்தைத் தொடங்க வேண்டும்.
'லிட்டில் ஃபார்ம்ஸ்' நிறுவனம் சென்ற ஆண்டு அக்டோபரில் இறக்குமதி செய்த குளிரூட்டப்பட்ட ஆட்டு இறைச்சி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இறக்குமதி செய்த கடலுணவு வகைகள் ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவில்லை.
உண்ணத் தகுதியில்லாத உணவுப்பொருள்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கு இச்சோதனை அவசியம்.

