புகழ்பெற்ற சமூக ஊடகத்தளமான 'ரெட்டிட்' இம்மாதம் 5ஆம் தேதி இணையத் தாக்குதலுக்கு உள்ளானது. இணைய ஊடுருவிகள் அத்தளத்தின் ஆவணங்கள், குறியீடுகள் போன்றவற்றை எட்ட முடிந்தாலும் பயனாளர் தகவல்கள் ஏதும் கசியவில்லை என்று கூறப்பட்டது.
நிறுவனத்தின் தொடர்புப் பட்டியலைப்போல் உருவாக்கப்பட்டிருந்த போலிப் பட்டியலில் இருந்த தகவல்களை ஊடுருவிகள் காணமுடிந்தது. ஊழியர்களின் தொடர்பு விவரங்கள், விளம்பரதாரர் தகவல்கள் அடங்கிய ஆவணங்களும் ஊடுருவப்பட்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
'ரெட்டிட்' நிறுவன ஊழியர்களைக் குறிவைத்த மின்னஞ்சல் மோசடியின் விளைவாக இவ்வாறு நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"மோசடி மின்னஞ்சல், நிறுவன ஊழியர்களுக்கான இணையத்தளம் போன்றே உருவாக்கப்பட்டிருந்த போலித்தளத்திற்கு இட்டுச்சென்றது. அந்தப் போலித்தளம் ஊழியர்களின் '2எஃப்ஏ' எனப்படும் இரண்டு அம்ச பாதுகாப்பு நடைமுறையின் மறைச்சொல்லைத் திருட முற்பட்டது," என்றார் அவர்.
ஒரே ஒரு ஊழியரின் முக்கியத் தகவலைத் திருடிய பிறகு, இணையத் தாக்குதல்காரரால் 'ரெட்டிட்' நிறுவனத்தின் ஆவணங்கள் சிலவற்றையும் வர்த்தகக் கட்டமைப்பையும் காண முடிந்தது. திருடப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசியவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயனாளர்கள் இந்த இணையத் தாக்குதலால் பாதிக்கப்படாவிட்டாலும்கூட, தங்கள் கணக்கு களுக்கு '2எஃப்ஏ' பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றி மறைச்சொற்களை அமைத்துக்கொள்வது மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் என்று நிறுவனப் பேச்சாளர் பரிந்துரைத்தார்.
சில மாதங்களுக்கு ஒருமுறை மறைச்சொற்களை மாற்றியமைப்பது நல்லது என்றார் அவர். மறைச்சொற்களை நிர்வகிக்கும் 'பாஸ்வோர்ட் மேனேஜர்' மென்பொருளைப் பயன்படுத்தும்படியும் அவர் பரிந்துரைத்தார்.

