சைனா டவுன் வட்டாரத்தில் உள்ள பேரங்காடியின் ஊழியருடன் சண்டையிட்ட 45 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில், எண் 1, பார்க் ரோட்டில் உள்ள ஸ்கார்லெட் பேரங்காடிக் கிளையில் மூண்ட சண்டை குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தில் செயல்படும் இந்தப் பேரங்காடிக் கிளை 24 மணி நேரமும் திறந்திருக்கக்கூடியது. இதில் பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதியான பொருள்கள் விற்கப்படுகின்றன.
இணையத்தில் பரவும் காணொளி ஒன்றில் கறுப்பு டி-சட்டை அணிந்த ஆடவர் கடை ஊழியருடன் கைகலப்பில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது.
காசாளர்கள் இவ்விருவரின் சண்டையைத் தடுக்க முயல்கின்றனர். பின்னர் பொதுமக்கள் சிலரின் உதவியுடன் கடை ஊழியர், சண்டையிட்ட ஆடவரை வளைத்துப் பிடித்தார்.
சம்பவ இடத்துக்குக் காவல்துறையினர் வருவதைக் காட்டும் காணொளிகளும் இணையத்தில் இடம்பெற்றுள்ளன.
ஆடவர் சுய நினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஆடவருடன் சண்டையிட்ட 30 வயது ஊழியருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது அவர் காவல்துறையினருக்கு விசாரணையில் உதவிவருகிறார்.

