சம்பளத்துடனான தந்தையர் விடுப்பு இரட்டிப்பாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளின் தந்தையர் இரண்டு வாரங்களுக்குப் பதிலாக நான்கு வார சம்பளத்துடனான தந்தையர் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தக் கூடுதல் தந்தையர் விடுப்பை வழங்குவதா இல்லையா என்ற முடிவு முதலாளிகளிடம் விடப்படுகிறது.
கூடுதல் விடுப்பு வழங்க தயாராக இருக்கும் முதலாளிகளுக்கு அரசாங்கம் அதற்கான செலவை ஏற்கும்.
"மாற்றத்துடன் பழகிக்கொள்ள முதலாளிகளுக்குக் கூடுதல் நேரம் தரும் வகையில் கூடுதல் இரண்டு வார தந்தையர் விடுப்பைக் கட்டாயமாக்கவில்லை. குறிப்பாக, தற்போதைய பொருளியல் நிலையுடன் முதலாளிகள் பலர் எதிர்நோக்கும் மனிதவள, செயல்முறை சவால்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று திரு வோங் தெரிவித்தார். இத்திட்டம் காலப்போக்கில் மறுஆய்வு செய்யப்படும் என்றார் அவர். எதிர்காலத்தில் இந்தக் கூடுதல் இரண்டு வாரத் தந்தையர் விடுப்பைக் கட்டாயமாக்குவதே இலக்கு என்று அவர் கூறினார்.
குழந்தை பிறப்பதற்கு முன்பு தொடர்ச்சியாகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு சுயதொழில் செய்யும், வர்த்தகத்தில் ஈடுபடும் அல்லது பணிபுரிபவர்கள், கூடுதல் தந்தையர் விடுப்புக்குத் தகுதிபெறுகின்றனர்.
சம்பளமில்லாக் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு அதிகரிப்பு
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து சிறு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர் மேலும் அதிகமான சம்பளமில்லாக் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு எடுக்கலாம் என்று துணைப் பிரதமர் வோங் தெரிவித்தார்.
சம்பளமில்லாக் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு ஆண்டுக்கு ஆறு நாள்களிலிருந்து 12 நாள்களாக உயர்த்தப்படுகிறது. குழந்தை பிறந்து முதல் இரண்டு ஆண்டுகளில் இந்த விடுப்பை பெற்றோர் எடுத்துக்கொள்ளலாம்.
"புதிதாக பிறந்த குழந்தையைப் பராமரிக்கவும் ஒன்றாக நேரம் செலவழிக்கவும் அல்லது குழந்தையைப் பார்த்துக்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் இந்தக் கூடுதல் விடுப்பு உதவும்," என்றார் திரு வோங்.
இந்தக் கூடுதல் விடுப்புடன் சேர்த்து, குழந்தை பிறந்து ஓராண்டுக்குள் அதைப் பார்த்துக்கொள்ள வேலை செய்யும் தம்பதியருக்காக வழங்கப்படும் மொத்த விடுப்பு 22 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக அதிகரிக்கிறது," என்று திரு வோங் தெரிவித்தார்.
தந்தையர் விடுப்பு அதிகரிப்பு 34 வயது திரு பிரபாகரன் ராமநாதன் போன்ற தந்தையருக்கு உதவக்கூடும். தம்முடைய இரு சிறு பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக தமது ஏழாண்டு ஆசிரியர் பணியிலிருந்து விலகி சொத்து முகவராகத் தற்போது இயங்கி வருகிறார். குழந்தைப் பராமரிப்பில் கூடுதல் பங்கு வகிக்க இனிவரும் மாற்றங்கள் உதவலாம் என அவர் கருத்து தெரிவித்தார்.
இனி அதிகரிக்க இருக்கும் குழந்தை போனஸ் ரொக்க அன்பளிப்பு, பிரபாகரன்-சரஸ்வதி தம்பதியினருக்குக் குழந்தை, கைக்குழந்தைப்
பராமரிப்பு நிலையக் கட்டணங்களைச் செலுத்துவதற்குப் பெரிதும் கைகொடுக்கும்.
மாதந்தோறும் ஏறக்குறைய $12,000 வருமானம் உள்ள இருவருக்கும், இரண்டரை வயது மகளுக்கும் நான்கு மாதப் பெண் குழந்தைக்கும் மொத்தம் $4,000 வரை நிதி ஒதுக்கவேண்டிய சூழல் உள்ளது.

