பணவீக்கத்தை எதிர்கொள்ளவும் பொருள், சேவை வரி அதிகரிப்பின் தாக்கத்தைக் குறைக்கவும் சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படும் என்று
வரவுசெலவுத் திட்டத்தை நேற்று தாக்கல் செய்தபோது தெரிவித்தார் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்.
$13,000 அல்லது அதற்கும் குறைவான வருடாந்திர மதிப்பு கொண்ட வீடுகளில் வசிப்போருக்கு வழங்கப்படும் பொருள், சேவை வரி பற்றுச்சீட்டுகளின் மதிப்பு இவ்வாண்டு $500லிருந்து $700ஆக உயர்த்தப்படும். அடுத்த ஆண்டிலிருந்து இது $850ஆக ஏற்றம் காணும்.
$13,000லிருந்து $21,000 வரையிலான வருடாந்திர மதிப்பு கொண்ட வீடுகளில் வசிப்போருக்கு இவ்வாண்டு $350 வழங்கப்படும். இது அவர்களுக்கு முன்பு வழங்கப்பட்டதைவிட $100 அதிகம். இவர்களுக்கு வழங்கப்படும் தொகை அடுத்த ஆண்டிலிருந்து $450ஆக உயரும்.
இந்தக் கூடுதல் ஆதரவுக்காக ஆண்டுக்கு $530 மில்லியன் செலவழிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டிலிருந்து பொருள், சேவை வரி பற்றுச்சீட்டுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் $1.7 பில்லியன் செலவழிக்கும்.
2020ஆம் ஆண்டில் அறி
முகப்படுத்தப்பட்ட உத்தரவாத தொகுப்புத் திட்டத்தில் கூடுதலாக $3 பில்லியன் நிரப்பப்படும். இதன் விளைவாக இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொகை $6.6 பில்லியனிலிருந்து $9.6 பில்லியனாக ஏற்றம் காண்கிறது.
தகுதிபெறும் சிங்கப்பூரர்
களுக்கு இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரொக்கம் $300லிருந்து $650ஆக அதிகரிக்கப்படுகிறது. இதன்மூலம் 21 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் $700லிருந்து $2,250 வழங்கப்படும்.
பொருள், சேவை வரி அதி
கரிப்பால் பெரும்பாலான குடும்பங்களுக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளையும் குறைந்த வருமான குடும்பங்களுக்கு ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளையும் இந்த உத்தரவாத தொகுப்புத் திட்டம் ஈடுசெய்யும்.
அடுத்த ஆண்டில் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளின் மதிப்பு $100 கூடும். இதன் விளைவாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு $300 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
ஒருமுறை வழங்கப்படும் உதவித் திட்டங்கள் குறித்தும் திரு வோங் நேற்று தெரிவித்தார்.
இவ்வாண்டு 21 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு வாழ்க்கைச் செலவினம் சிறப்புத் திட்டத்தின்கீழ் $200லிருந்து $400 வரை கிடைக்கும். தகுதிபெறும் 55 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கும் மூத்தோருக்கான வாழ்க்கைச் செலவின போனஸ் திட்டத்தின்கீழ் $200லிருந்து $300 வரை வழங்கப்படும். அடுத்த மூன்று கட்டங்களாக சிங்கப்பூர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் யூ-சேவ் தள்ளுபடி இரட்டிப்படைகிறது. தகுதிபெறும் குடும்பங்களுக்கு இவ்வாண்டு $760 வரையிலான யூ-சேவ் தள்ளுபடி வழங்கப்படும்.
ஆறு வயது அல்லது அதற்கும் குறைவான சிறுவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரது பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் $400 நிரப்பப்படும்.
அதைவிட அதிக வயதுடைய சிறுவர்களின் எடுசேவ் கணக்கில் அல்லது உயர்க்கல்வி கணக்கில் $300 நிரப்பப்படும்.

