மத்திய சேம நிதிச் சந்தா செலுத்துவதற்கான மாதாந்திர சம்பள வரம்பு 2026ல் $8,000 ஆக உயர்த்தப்படும். சம்பளம் உயர்வதால் அதற்கேற்ப இந்த வரம்பும் உயர்கிறது. நடுத்தர வருமான சிங்கப்பூரர்கள் ஓய்வு காலத்திற்கு அதிகத் தொகையைச் சேமித்து வைக்கவும் இது உதவும். இப்போது இந்த வரம்பு $6,000 ஆக இருக்கிறது.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023 வரவுசெலவுத் திட்டத்தில் இதை அறிவித்தார்.
முதலாளிகளும் ஊழியர்களும் இந்த மாற்றத்திற்குத் தோதாக மாறிக்கொள்ள ஏதுவாக இவை நான்கு கட்டங்களாக படிப்படியாக நடப்புக்கு வரும்.
அதாவது 2023 செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து மாத வருவாய் வரம்பு $6,300 ஆகும்.
2024 ஜனவரி 1 முதல் அந்த வரம்பு $6,800 ஆக அதிகரிக்கும்.
பிறகு 2025 ஜனவரி 1 முதல் இந்த வரம்பு $7,400 ஆகவும் 2026 ஜனவரி 1 முதல் $8,000 ஆகவும் உயர்த்தப்படும்.
55 வயது, அதற்கு குறைந்த வயதுள்ள ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 20 விழுக்காட்டுத் தொகையை மசே நிதிச் சந்தாவாகச் செலுத்துகிறார்கள்.
அந்த ஊழியர்களின் முதலாளிகள் சம்பளத்தில் 17 விழுக்காட்டுத் தொகையைச் சந்தாவாக செலுத்துகிறார்கள். இந்த ஏற்பாடு மாறாது.
இருந்தாலும் சந்தாக்கள் மாதாந்திர சம்பள அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இப்போது $6,000 அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதற்குப் பதிலாக 2026 ஜனவரி 1ல் இருந்து $8,000 வரை என்ற வரம்பின் அடிப்படையில் சந்தா நிர்ணயிக்கப்படும்.
மாத வருமான வரம்பில் இடம்பெறக்கூடிய இந்த மாற்றம் இதற்கு முன் 2016ல் இடம்பெற்றது. அப்போது வரம்புத் தொகை $5,000லிருந்து $6,000 ஆக உயர்த்தப்பட்டது.
மசே நிதி வருடாந்திர சம்பள வரம்பு ஒன்றும் நடப்பில் இருந்து வருகிறது. இது மசே நிதிச் சந்தாவாக செலுத்தப்படும் கூடினபட்ச தொகையை நிர்ணயிக்கிறது. இப்போதைக்கு மசே நிதி வருடாந்திர வரம்பில் மாற்றம் இருக்காது என்று நிதி அமைச்சின் அறிக்கை ஒன்று தெரிவித்து இருக்கிறது.
இருந்தாலும் இது காலக்கிரம முறைப்படி மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.
முதிய ஊழியர்களுக்குரிய சந்தா விகிதத்தை 2024ல் அரசாங்கம் தொடர்ந்து உயர்த்தும் என்றும் துணைப் பிரதமர் வோங் தெரிவித்தார்.
2024 ஜனவரி 1 முதல், 55லிருந்து 60 வரை வயதுள்ளவர் களுக்கான மசே நிதிச் சந்தா 1.5% கூடி 31% ஆக இருக்கும்.
60 முதல் 65 வரை வயதுள்ளவர்களுக்கு சந்தா 1.5% கூடி 22% ஆகும். 65 முதல் 70 வரை வயதுள்ளவர்களுக்கு சந்தா 1% கூடி 16.5% ஆக இருக்கும்.
இந்த சந்தா உயர்வு எல்லாம் மசே நிதி சிறப்புக் கணக்கில் சேரும். முதிய ஊழியர்கள் இதன் வழி ஓய்வு காலத்திற்கு அதிகத் தொகையைச் சேர்க்கமுடியும்.
சந்தா தொகை கூடுவதால் நிறுவனங்களுக்குச் செலவு கூடும். இதைக் கருத்தில்கொண்டு ஓராண்டு மசே நிதி ஈட்டுத் தொகையை முதலாளி களுக்கு அரசாங்கம் வழங்கும்.
இந்தத் தொகை 55 முதல் 70 வரை வயதுள்ள சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் ஒவ்வொருவருக்கும் முதலாளிகள் 2024ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய கூடுதல் சந்தா தொகையில் பாதி அளவுக்கு ஈடுசெய்துவிடும்.
முதியவர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய தொகை திட்டத்தின் பேரில் கொடுக்கப்படும் குறைந்தபட்ச மசே நிதி மாதாந்திரத் தொகை இப்போது மாதம் ஒன்றுக்கு $250 ஆக உள்ளது.
இது மாதம் ஒன்றுக்கு $350 ஆக உயர்த்தப்படும். இந்த ஏற்பாடு இத்திட்டத்தில் இடம்பெற்று இருக்கும் முதியவர்கள் அனை வருக்கும் 2023 ஜூன் 1 முதல் தொடங்கும்.
மசே நிதி சேமிப்பில் பணம் இருக்கும் வரை இந்தப் பட்டுவாடா தொடரும். ஆயுள் முழுவதும் பணம் பெற விரும்பினால் 80 வயதுக்கு முன் எந்த நேரத்திலும் முதியவர்கள் சிபிஎஃப் லைஃப் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

