தேசிய உற்பத்தித்திறன் நிதியில் அரசாங்கம் $4 பில்லியனை சேர்க்கிறது. பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து உயர் ஆற்றல்மிக்க முதலீடுகளை சிங்கப்பூருக்குக் கவர்ந்து ஈர்க்கும் முயற்சிகளை இரு மடங்கு ஆக்குவது இதன் நோக்கம்.
தேசிய உற்பத்தித்திறன் நிதி 2010ல் அமைக்கப்பட்டது. நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தித்திறனைப் பெருக்கி ஊழியர் களுக்குத் தொடர்ந்து தேர்ச்சிகளை அளிக்க உதவும் பலதரப்பட்ட செயல்திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக இந்த நிதி அமைக்கப்பட்டது.
இப்போது இந்த நிதியின் இலக்குகள் விரிவுபடுத்தப்படும். இதில் முதலீட்டு மேம்பாடுகளும் உள்ளடங்கும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
தேசிய உற்பத்தித்திறன் நிதியைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குத் தரமான முதலீடுகளை அதிகமாக ஈர்க்க முயற்சிகள் இடம்பெறும் என்றார் திரு வோங்.
நிறுவனங்கள் புதுப்புது ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள, அதிக அளவுக்கு மதிப்பை மேம்படுத்திக்கொள்ள, ஊழியர்களின் தேர்ச்சிகளை மேம்படுத்த அந்த நிதி ஆதரவு அளிக்கும்.
முடிவில், இந்த முயற்சிகள் எல்லாம் சிங்கப்பூரர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைகள் கிடைக்க வகை செய்யும் என்று திரு வோங் கூறினார்
பன்னாட்டு நிறுவனங்கள் பல ஆண்டு காலமாகவே சிங்கப்பூ ருக்கு வந்து எண்ணெய், நிதி, மின்னணு, மருந்துத் துறைகளில் ஏராளமான முதலீடுகளைச் செய்துள்ளன. உலக திறனாளர்களும் இங்கு வர விரும்புகிறார்கள். எனினும் பன்னாட்டு நிறு வனங்களின் முதலீடுகள் இப்போது உலகப் புவிசார் நிலவரங்களுக்கும் அமெரிக்கா, சீனா பொருளியல் போட்டாபோட்டி களுக்கும் இடையில் சிக்கி விடக்கூடியதாக தெரிகிறது.
மிகவும் அதிகப் போட்டி நிறைந்த வளர்ச்சித் துறைகளில் சிங்கப்பூர் ஒருமித்த கவனத்தைச் செலுத்தும். நிதி, போக்குவரத்து, தளவாடப் போக்குவரத்து, மின்னணு, வேதிப்பொருள், உயிரியல் மருத்துவ அறிவியல் போன்ற துறைகள் இவற்றில் அடங்கும்.
"சிங்கப்பூரில் தலைசிறந்த வசதிகள், மதிப்புமிக்க செயல்பாடுகள் ஆகியவற்றைக் கட்டிக்காத்து அவற்றைக் கொண்டு புதிய ஆற்றல்களைப் பலப்படுத்துவோம்.
"முக்கியமான தொழில்துறைகளை மேம்படுத்துவோம். இவற்றின்மூலம் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை ஏற்படுத்துவோம்," என்று துணைப் பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.

