அரசாங்கம், வேலைகளையும் தேர்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் நிறுவனங்களை வேலை-தேர்ச்சி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கும். துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
அதிகத் தேர்ச்சி என்பது பொதுவாகவே ஆக்ககரமான ஒன்றுதான். எனினும் தொழில் துறைக்கு ஏற்புடையதாக தெரிய வரும் அதிக ஆற்றல்மிக்க தேர்ச்சிகளை அடையாளம் காண்பது என்பது முதலாளிகள்- ஊழியர்கள் இருவருக்குமே சிரமமாக இருக்கலாம். இதனால்தான் அரசாங்கம் அத்தகைய ஒருங்கிணைப்பாளரை நியமிக்கிறது என்று திரு வோங் விளக்கினார்.
பயிற்சி என்பது ஒருவருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகளை அதிகமாக்கும். அதிகச் சம்பளம் பெறவும் அது வழிவகுக்கும்.
இதைத் தொழில்துறை, பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், வேலை தேடித் தரும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து அத்தகைய ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்தும்.
ஊழியர்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்கள் செயல்திட்டங்கள் பற்றி திரு வோங் அறிவித்தார். அவற்றில் இது ஒன்றாகும்.
தொடர்ந்து வேலை பார்க்க விரும்பும் முதியோருக்கு அதிக ஆதரவு, குறைந்த வருமான ஊழியர்கள் சிறந்த வாழ்க்கைத்தொழில் மேம்பாடுகளைக் காண அதிக உதவிகள், முன்னாள் குற்றவாளிகள் போன்ற ஊழியர்கள் வேலைகளைப் பெற உதவுவது அவற்றில் அடங்கும்.

