சென்ற ஆண்டு சாலை விபத்துகளில் 23 முதிய பாதசாரிகள் உயிரிழந்தனர். இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53.3 விழுக்காடு அதிகம்.
பாதசாரிகள் தொடர்பான சாலை விபத்துகளில் காயம் அடைந்த 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் எண்ணிக்கையும் சென்ற ஆண்டு அதிகரித்தது. 2022ல் 213 முதியவர்கள் இவ்வாறு காயமடைந்தனர். 2021ல் இந்த எண்ணிக்கை 193 ஆக இருந்தது.
போக்குவரத்துக் காவல்துறை நேற்று வெளியிட்ட வருடாந்தரப் புள்ளிவிவர அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன.
சென்ற ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 108.
2022ல் பாதசாரிகள் உயிரிழந்த சாலை விபத்துகளில் 70 விழுக்காட்டுச் சம்பவங்களில் 60 அல்லது அதற்குமேல் வயதான முதியவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
முதியவர்கள், 'ஜே வாக்கிங்' எனப்படும் சாலைவிதிகளை அலட்சியப்படுத்தி சாலையைக் கடப்பது இத்தகைய மரணங்களுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. மரணம் ஏற்படுத்திய சாலை விபத்துகளில் இத்தகைய விபத்துகளின் விகிதம் 73.9 விழுக்காடு.
சென்ற ஆண்டு சாலை விபத்துகளில் காயமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8,252க்கு உயர்ந்தது. அதற்கு முந்தைய ஆண்டு இவ்வெண்ணிக்கை 7,240 ஆக இருந்தது.
சாலை விபத்துகளில் முதிய பாதசாரிகளும் மோட்டார் சைக்கிளோட்டிகளும் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
பாதசாரிகள் சாலைவிதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். சாலையைக் கடப்பதற்கு முன்பாக, வாகனங்கள் ஏதும் வருகின்றனவா என்று கவனிப்பது அவசியம். பாதசாரிகளுக்கான 'ஸீப்ரா' கடக்குமிடத்தைப் பயன்படுத்தும்போதும் இது முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
சென்ற ஆண்டு, மது அருந்திவிட்டு வாகனமோட்டியதால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இத்தகைய விபத்துகளில் 10 பேர் மாண்டனர்.
போக்குவரத்துச் சமிக்ஞையின் சிவப்பு விளக்கை மதிக்காமல் வாகனமோட்டுவோர் எண்ணிக்கை 2022ல் ஏறக்குறைய 2.3 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

