படிப்படியாக உயரும் சம்பளமுறை யின்கீழ் வழங்கப்படும் பயிற்சியில் தேர்ச்சி பெறாததால் யாரும் பதவி இறக்கம் செய்யப்பட்டதாகவோ யாருக்கும் ஊதியம் குறைக்கப்பட்டதாகவோ மனிதவள அமைச்சில் புகாரளிக்கப்படவில்லை.
மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது நாடாளுமன்றத்தில் நேற்று இவ்வாறு கூறினார்.
படிப்படியாக உயரும் சம்பளமுறை அமலுக்கு வந்த பிறகு இத்தகைய சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்தனவா என்று நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கேரி டான் எழுப்பிய கேள்விக்கு திரு ஸாக்கி பதிலளித்தார்.
பாதுகாவல் துறை, துப்புரவுத் துறை, நிலவனப்பு வடிவமைப்புத் துறை ஆகியவற்றில் பணிபுரியும் அனுபவமிக்க ஊழியர்கள், முதிய ஊழியர்கள் ஆகியோர் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். இத்தகையோர் மொழியறிவுக் குறைவால் தகுதிச் சான்றிதழுக்கான தேர்வில் தேர்ச்சி பெறாமல், பதவி இறக்கம் அல்லது ஊதியக் குறைப்புக்கு ஆளாயினரா என்று திருவாட்டி டான் கேட்டார்.
இத்தகைய சம்பவங்களை மனிதவள அமைச்சு எவ்வாறு கையாள்கிறது, இவ்வாறு நேர்ந்தால் ஊழியர்கள் என்ன செய்யவேண்டும் என்றும் அவர் வினா எழுப்பினார்.
இவற்றுக்குப் பதிலளித்த திரு ஸாக்கி, இதுவரை மனிதவள அமைச்சு, ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு, துப்புரவு, பாதுகாவல், நிலவனப்பு வடிவமைப்பு ஆகிய துறைகள் சார்ந்த அமைப்புகள் என எங்கும் இத்தகைய சம்பவங்கள் குறித்துப் புகாரளிக்கப்படவில்லை என்று கூறினார்.
படிப்படியாக உயரும் சம்பளமுறையின்கீழ் வழங்கப்படும் பயிற்சிகளில் மொழியறிவுக் குறைவால் தேர்ச்சி பெறாததால் சவால்களை எதிர் நோக்கும் ஊழியர்கள் ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பிடம் உதவி நாடலாம் என்று தெரிவித்தார். நியாயமற்றமுறையில் நடத்தப்பட்டதாக உணரும் ஊழியர்கள் அவர்களின் தொழிற்சங்கத்தையோ மனிதவள அமைச்சையோ அணுகலாம் என்றார் அவர்.
படிப்படியாக உயரும் சம்பளமுறையின்கீழ், குறைந்த வருவாய் ஈட்டும் ஊழியர்களுக்கு வேலை, பயிற்சி மேம்பாட்டு உதவி வழங்கப்படுவதாக திரு ஸாக்கி குறிப்பிட்டார்.
ஒரு வேலைக்கான திறன் ஊழியரிடம் இல்லாதபட்சத்தில் முதலாளிகள் அவர்களை வேறு பொருத்தமான வேலையில் பணியமர்த்தலாம் என்றார் அவர்.

