இந்த ஆண்டின் முதல் ஐந்து வாரங்களில், கிட்டத்தட்ட 39,000 பாலியல் ஊக்க மருந்துகளை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்ற மாதம் 3, 14 ஆகிய தேதிகளில் பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் வந்திறங்கிய சரக்குக் கொள்கலன்களில் சந்தேகத்துக்குரிய பொருள்கள் இருப்பதாக அதிகாரிகள் கருதினர். அதன் பிறகு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவற்றில் சென்ற மாதம் 3ஆம் தேதி 17,000 பாலியல் ஊக்க மருந்துகளும் 14ஆம் தேதி இத்தகைய 19,000 ஊக்க மருந்துகளும் பிடிபட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இம்மாதம் 4ஆம் தேதி, மேலும் 3,000 பாலியல் ஊக்க மருந்துகளை சாங்கி விமான நிலைய சரக்கு மையத்தில் இருந்து குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் கைப்பற்றினர். இவைகுறித்து சுகாதார அறிவியல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது.
நம்பகமற்ற விற்பனையாளர்களிடமிருந்து பாலியல் ஊக்க மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தினால் ஆபத்து நேரலாம். சில நேரங்களில் உயிரிழக்கவும் நேரிடும் என்று ஆணையம் நினைவுறுத்தியது.

