ஆ. விஷ்ணு வர்தினி
கடந்த ஆண்டுகளில் வர்த்தகங்கள் எதிர்நோக்கிய சில சிக்கல் களை இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள் தீர்த்து வைக்கும் என்று வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே நேரம் தங்கள் செலவுகள் அதிகரிக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ வோங் நேற்று முன்தினம் தாக்கல் செய்த இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பொருளியலை ஊக்குவிக்கும் நோக்கில் சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்கு சாதகமான அரசாங்க ஆதரவுத் திட்டங்களை அறிவித்தார்.
நோய்ப்பரவல் காலத்தின் நிலையற்ற சூழலிலிருந்து மீட்சி அடைந்து கரையேற முயன்ற வர்த்தகங்களை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் தலைவர் நீல் பரேக் தெரிவித்தார்.
தேவையான நிதி ஆதரவை வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்களாலும் மின்சார, தண்ணீர்க் கட்டண உயர்வால் செலவுகள் அதிகரித்ததாலும் வர்த்தகர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்நிலையில், நீட்டிக்கப்பட்டுள்ள தொழில்நிறுவன நிதி ஆதரவுத் திட்டத்தையும் எரிசக்தி செயல்திறன் திட்டத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள் ளும்படி திரு பரேக் வர்த்தகர்களை ஊக்குவித்தார். அத்திட்டங்கள் 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
புதிய வர்த்தகம் அமைக்கவும் நடைமுறை மூலதனத்துக்கும் கடன்பெற தொழில்நிறுவன நிதி ஆதரவுத் திட்டம் உதவுகிறது. நிறுவனங்கள், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் செயலாற்றல்மிக்க சாதனங்களை வாங்க உணவுச் சேவை, உணவு உற்பத்தி, சில்லறை வர்த்தகத் துறை நிறுவனங்களுக்கு உதவும்.
அரசாங்கம் நிறுவனங்களுக்காக ஒதுக்கியுள்ள நிதி ஊக்கமளித்தாலும், குறிப்பிட்ட, 'நம்பிக்கைக்குரிய' வர்த்தகங்களே பெரும்பாலும் பயனடையக்கூடும் என நம்புவதாக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கத்தின் கௌரவ செயலாளர் ருத்ராபதி பார்த்தசாரதி குறிப்பிட்டார்.
தகுதிபெறும் வர்த்தகங்கள் குறித்து கூடுதல் தகவல்கள் கிட்டும்போதுதான் இதன் தாக்கம் புலப்படும் என்று அவர் கூறினார்.
ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கும், மூத்த ஊழியர்களுக்கான பயிற்சிக்கும் ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆதரவு இருந்தபோதும் லிட்டில் இந்தியா வர்த்தகங்களுக்கு உள்நாட்டு ஊழியர்களுக்கான பற்றாக்குறை இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
"இச்சிக்கலைக் களைவதற்கு நேரடி ஆதரவு இருந்தால் சிறப்பு. வரவுசெலவுத் திட்டத்தில் மனிதவள அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் மேல்விவரங்களை எதிர்பார்த்துள்ளோம்," என்றார் அவர்.
இதற்கிடையே, புகையிலைப் பொருள்களுக்கான 15% சுங்க வரி உயர்வு பலசரக்குக் கடை களின் வர்த்தகத்தைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இயங்கிவரும் எல். எஸ். லக்ஷ்மி கடைக்கு இது புதிதல்ல.
"சுங்க வரி முன்பு 10 விழுக்காடு உயர்த்தப்பட்டபோது வியாபாரம் ஓரளவு பாதிக்கப்பட்டது. இப்போது விலை மேலும் கூடுகிறது. அதனால் புகையிலை பொருள்களின் தேவையா என்று வாடிக்கையாளர்கள் இனி மறு பரிசீலனை செய்ய தொடங்கி விடுவர். எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையினரான வெளிநாட்டு ஊழியர்கள் மனம் மாறக்கூடும்," என்றார் கடை உரிமையாளர்களில் ஒருவரான திருவாட்டி இந்துமதி.
சுங்க உரி உயர்வால், மாதந்தோறும் $300 வரை மொத்த வரிக் கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
கொவிட்-19 பாதிப்புக்குப் பின்னர் அண்மைக்காலமாக சூடுபிடித்த வர்த்தகம் மீண்டும் மந்தம் அடையலாம் என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.
பணவீக்கம், ஊழியரை வேலையில் சேர்க்கும் செலவுகள் உயர்ந்துள்ளது, அதிக வட்டி விகிதம் முதலியவை நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதித்து வரும் சூழலில், அரசாங்கத்தின் நிதி ஆதரவு வரவேற்கத்தக்கத்து என்று சிங்கப்பூர் உற்பத்தித் துறை சம்மேளனம் கூறியுள்ளது.
குறிப்பிட்ட புத்தாக்க செயல்பாடுகளுக்கு வரிக் கழிவு வழங்கும் புதிய தொழில்நிறுவன புத்தாக்கத் திட்டம் ஆய்வு முயற்சி களுக்கு வித்திடும் என்றும் அது நம்பிக்கை தெரிவித்தது.
உலகளவில் தங்களை வேறு படுத்திக் கொள்வதற்கு புதுச் சேவைகளையும் பொருள்களையும் முன்வைக்க தொடர்ந்து உயர்கல்விக் கழகங்களுடன் இணைந்து செயல்படப் போவதாக சம்மேளனம் குறிப்பிட்டது.

