ஜூரோங் வெஸ்ட்டில் பக் குத் தே விற்கும் கடை நடத்திவருகிறார் திருவாட்டி ஜெலின் வூன் (படம்).
இம்மாதம் 4ஆம் தேதி, தன் கடைக்கு முன்னால் இருக்கும் மேசையில் தோளில் மாட்டும் பை ஒன்றை யாரோ விட்டுச் சென்றதைக் கண்டார். அதை எடுத்துப் பார்த்தபோது உள்ளே பெரிய கட்டாக $100 நோட்டுகள் இருந்ததைப் பார்த்து வியந்தார். எவ்வளவு தொகை என்று இவர் எண்ணிப் பார்க்கவில்லை.
அந்த மேசையில் ஆடவர் ஒருவர் உணவு உண்டது திருவாட்டி வூனுக்கு நினைவு வந்தது. ஒருவேளை அந்த ஆடவர் பணத்தைத் தேடித் திரும்பி வரக்கூடும் என்று எதிர்பார்த்து பையைப் பாதுகாப்பாக வைத்தார்.
பணத்தைத் தவறவிட்டவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்தே தனது அலட்சியத்தை நொந்தவாறு திரும்பிவந்தார். அது கிடைக்கும் என்று அவருக்கு நம்பிக்கை இல்லை.
திருவாட்டி வூன் பணப்பையைத் தந்தபோது அவருக்கு மிகப் பெரிய ஆறுதல் கிட்டியது.
தன்னைத் திரு பே என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஆடவர், அந்தப் பையில் $13,000 ரொக்கம் இருந்ததாகவும் அது தன் தம்பியின் இறுதிச் சடங்குக்கானது என்றும் தெரிவித்ததாக அவர் கூறினார்.
திரு பே தனது உறவினர் என்று, 'ஸ்டாம்ப்' தளத்தில் குறிப்பிட்டுள்ள வாசகர் ஒருவர், கிடைக்கவே கிடைக்காது என்று எண்ணியிருந்த பணப்பை கிடைத்தது என்றும், அதில் இருந்த பணம் பாதுகாப்பாக அப்படியே இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருவாட்டி வூனின் கனிவு, நேர்மை ஆகிய பண்புகளை அவர் பாராட்டியுள்ளார்.

