'செம்ப்மரின்' நிறுவனத்தை 'கெப்பல் ஓ அண்ட் எம்' நிறுவனத்துடன் இணைப்பதற்கு 95 விழுக்காட்டிற்கு அதிகமான பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர்.
ஓராண்டு நீடித்த இழுபறிக்குப் பிறகு இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் முறையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் இது தொடர்பான $4.5 பில்லியன் ஒப்பந்தத்திற்கு 95.28 விழுக்காட்டுப் பங்குதாரர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இணைப்புக்கு 50 விழுக்காட்டுக்கு மேலான பங்குதாரர்களின் ஒப்புதல் தேவையாக இருந்தது. 'செம்ப்மரின்' நிறுவனத்தில் 54.6 விழுக்காட்டுப் பங்குகளை வகிக்கும் அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக், வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இணைப்புக்குப் பிந்திய புதிய நிறுவனத்தில் அது 35.5 விழுக்காட்டுப் பங்குகளை வகிக்கும் என்று கூறப்படுகிறது.
'கெப்பல்' நிறுவனப் பங்குதாரர்களில் 99.6 விழுக்காட்டினர் சென்ற டிசம்பர் 8ஆம் தேதி இணைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.
'கெப்பல்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஓங், புதிய விரிவுபடுத்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிவார்.
கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 'செம்ப்மரின்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகச் செயல்படும் வோங் வெங் சுன், தற்காலிக மூத்த ஆலோசகராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இணைப்புக்குப் பிறகு உருவாகும் புதிய நிறுவனம், உலகின் ஆகப் பெரிய கடல்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும். அதில் 'செம்ப்மரின்' 46% பங்குகளையும் 'கெப்பல்' 54% பங்குகளையும் கொண்டிருக்குமெனக் கூறப்படுகிறது.

