ஆ. விஷ்ணு வர்தினி
குணப்படுத்த முடியாத நோயான 'பாலிசிஸ்டிக்' சிறுநீரக நோய், 18 வயது நர்மதாவுக்கு என்றைக்கும் ஒரு தடையாய் இருந்ததில்லை.
இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, வயதாக ஆக சிறுநீரகங்கள் இரண்டும் அளவில் பெருகும். நர்மதாவின் சிறுநீரகங்கள் தற்போது சாதாரண சிறுநீரக அளவைவிட கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு அதிகமாக வீங்கிப் பெரிதாகி உள்ளன. அதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டு தமது தொடக்கக் கல்லூரி பருவத்தில் அலைக்கழிக்கப்பட்டார் நர்மதா.
இத்தகைய இடையூறுகளைத் தாண்டி, நேற்று வெளியான பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலை தேர்வில் நர்மதா தேர்ச்சி பெற்றுள்ளார். சிறுவர், அல்லது குற்றவாளிகளுக்கான உளவியலாளராகும் கனவுடன் நடைபோடுகிறார் அவர்.
நர்மதாவின் மூன்று வயதில் இந்நோய் கண்டறியப்பட்டது. தமது முதுகுத்தண்டில் இரு சிறுநீரகங்களும் அழுந்தும் காரணத்தால், நர்மதாவுக்கு நீண்ட நேரத்துக்கு அமர்ந்திருப்பதும் நடப்பதும் அதிக வலியை ஏற்படுத்தும்.
இருப்பினும், தினமும் பொதுப் போக்குவரத்தில் ஒன்றரை மணி நேரம் செலவிட்டு ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரிக்கு அவர் சென்று வந்தார்.
நீண்ட நேரம் நீடித்த வகுப்புகளில் வலியைப் பொறுத்துக்கொண்டு அமர்ந்து இருந்தார். கடந்த ஈராண்டுகளிலேயே, நர்மதா மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குறிப்பாக, மேல் நிலை தேர்வு எழுதிய 2022ஆம் ஆண்டு நர்மதாவுக்கு நிறைய மேடுபள்ளங்கள் இருந்தன.
தொடக்கப்பள்ளி முடிவில் தந்தை விட்டுச்சென்ற பிறகு ஒற்றைத் தாயாரால் வளர்க்கப்பட்ட. நர்மதா, தாத்தா திரு கணபதியை அதிகம் நேசித்து வந்தார். ஆனால் ஜூலையில் தாத்தா மாரடைப்பால் காலமானார்.
அந்த இழப்பிலிருந்து மீண்டு வருவதற்குள், காய்ச்சல் தொற்று ஏற்பட்டு நர்மதா மருத்துவமனையில் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டார்.
மேல்நிலை முன்னோட்டத் தேர்வில் கிட்டத்தட்ட அனைத்துத் தேர்வுகளையும் நர்மதாவுக்கு எழுத முடியாமல் போனது.
அப்போதும் நர்மதா மனம் தளரவில்லை என்று அவரது வகுப்பாசிரியர் திருவாட்டி குணசெல்வி முனுசாமி சுட்டினார்.
"நர்மதா தனது மருத்துவச் சிக்கல்கள் குறித்து ஒருபோதும் புலம்பியதில்லை. மருத்துவமனையில் இருந்துகொண்டே அவர் பாடக்குறிப்புகளையும் சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வார்," என்றார் அவர்.
மேல்நிலை தேர்வுக்கு முந்தைய வாரம் கொவிட்-19 தொற்றும் ஏற்பட்டு முடங்கிய நர்மதா, தனது இன்னல்களைக் கையாண்டது குறித்து கூறியபோது, "என் தாத்தா அடிக்கடி சொன்னதுபோல, வெள்ளைச் சுவரில் சிறு கருப்புப் புள்ளிகளைப் போலவே இந்த சிக்கல்களைக் கருதினேன். எப்போதும் நிறைகளைக் காணவே அவர் என்னை ஊக்குவித்தார். இன்று அவர் இருந்திருந்தால் எனது தேர்ச்சியில் பெருமிதம் கொண்டிருப்பார்," என்றார்.
மேல்நிலைத் தேர்வு முடிவு களை நேற்று பெற்றுக்கொண்ட 10,930 மாணவர்களுள் நர்மதாவும் ஒருவர்.
மொத்தம் 93.4 விழுக்காட்டினர், 10,206 மாணவர்கள், குறைந்தபட்சம் மூன்று 'எச்2' பாடங்களில் தேர்ச்சியையும் பொதுத்தாள் அல்லது அறிவுசார் ஆய்வியல் பாடத்தில் தேர்ச்சியையும் அடைந்ததாக நேற்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டு வாரியமும் கூறின.

