ஊழல் புரிந்த கெப்பல் ஃபெல்ஸின் இரு முன்னாள் அதிகாரிகளுக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் செய்த ஊழலின் மொத்த மதிப்பு $60,000. வெளிநாடுகளுக்குச் செல்ல லஞ்சம் பெற்றதும் ஊழல் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
வோங் கோக் செங், 72 சீனாவுக்கும் டான் செங் சியா, 64 ஜப்பான் போன்ற இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
கெப்பல் ஃபெல்ஸிலிருந்து நீக்கப்பட்ட இரு அதிகாரிகளும் தங்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டனர்.
'கோரஸ் சவுத் ஈஸ்ட் ஏஷியா' என்ற நிறுவனத்துக்குச் சலுகைகள் வழங்குவதற்கு கைமாறாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த வட்டார பொது நிர்வாகியான 53 வயது தோங் சீ கோங்கிடமிருந்து அவர்கள் லஞ்சம் பெற்றுள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டபோது கெப்பல் ஃபெல்ஸில் வோங் கொள்முதல் மூத்த நிர்வாகியாகப் பணியாற்றினார். டான் அதே நிறுவனத்தில் மூத்த துணை ஒப்பந்த நிர்வாகியாகவும் உதவி பொது நிர்வாகியாகவும் பணிபுரிந்தார்.
டான் புரிந்த ஊழலின் மொத்த மதிப்பு சுமார் 53,672 வெள்ளி. இதில் 50,000 வெள்ளியை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார்.
நேற்று நீதிமன்ற விசாரணையின்போது டானுக்கு 85,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டு 3,672,35 வெள்ளி தண்டம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அவரது ஜப்பான் பயணத்துக்கு தோங் $24,000 வெள்ளி கொடுத்திருந்ததாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு விசாரணையில் தெரிய வந்தது.
தோங் இதே போன்று 2008 அல்லது அதற்கு முன்பும் செய்துள்ளார்.
2006ல் நடந்த மற்றொரு சம்பவத்தில் வோங்கும் அவரது மனைவியும் சீனா செல்ல தோங் $5,850 கொடுத்திருந்தார்.
வோங் லஞ்சமாகப் பெற்ற பணத்தை முழுமையாக திருப்பிக் கொடுத்துள்ள நிலையில் நேற்று அவருக்கு 15,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் தோங் 2008ஆம் ஆண்டில் சிங்கப்பூரிலிருந்து வெளியேறிவிட்டார். 2022ல் சிங்கப்பூர் திரும்பிய அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

