உலகம் ஆவன செய்ய வேண்டும் என தற்காப்பு அமைச்சர் வலியுறுத்து
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பகைமை சூடு கூடுகிறது. அது கொதிக்கும் நிலையை இன்னும் எட்டவில்லை. இருந்தாலும் அதிகரித்துள்ளது.
அந்த அனலைத் தணிக்க தன்னால் ஆன அனைத்தையும் உலகம் செய்ய வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் வலியுறுத்தினார்.
மியூனிக் 59வது பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், தைவான் பிரச்சினை காரணமாக மோதல் இடம்பெறக்கூடாது என்றே அமெரிக்காவும் சீனாவும் விரும்புகின்றன. ஆனாலும்கூட மோதல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால் அதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் தற்காப்பு அமைச்சர் எச்சரித்தார்.
தைவான் சுதந்திர முயற்சி மோதலைக் கிளப்பிவிடும் என்றாரவர். பிலிப்பீன்சில் மேலும் பல தளங்களை எட்டுவதற்கான முயற்சிகளை அமெரிக்கா அண்மையில் மேற்கொண்டது. தென்சீனக் கடல் பகுதியிலும் தைவான் நீரிணையிலும் ராணுவ வலிமையை சீனா அதிகரித்து இருக்கிறது.
இவை எல்லாம் போருக்கான அறிகுறிகளாகப் பார்க்கப்படலாம் என்றாரவர். இருந்தாலும்கூட போர் முரசு இன்னமும் ஒலிக்கத் தொடங்கவில்லை என்று அந்த உயர்நிலை கூட்டத்தில் ஆற்றிய உரையில் டாக்டர் இங் தெரிவித்தார். அந்த வருடாந்திர மூன்று நாள் கூட்டத்தில் தற்காப்பு, வெளியுறவுக் கொள்கைகளை வகுக்கும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.
ஆசியாவில் போர் மூண்டால் அது ஆசியாவுக்கு மட்டுமன்றி உலகிற்கே பேரழிவாக இருக்கும் என்பதை டாக்டர் இங் சுட்டினார்.
அத்தகைய ஒரு போரை நியாயப்படுத்தக்கூடிய அளவுக்கு காரணங்கள் எதுவும் இப்போது இல்லை என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா-சீனா உறவு அண்மைய வாரங்களில் மிகவும் பதற்றம் அடைந்து இருக்கிறது.
அமெரிக்க வானில் ஊடுருவிய சீனாவின் பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் இன்னமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டாக்டர் இங் பிரத்தியேக வட்ட மேசை கூட்டத்தில் உரையாற்றினார். தற்காப்பு அமைச்சர் 11வது முறையாக மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
டாக்டர் இங் மியூனிக் நகரில் இன்று வரை தங்கி இருப்பார். கருத்தரங்கில் பல நாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்களுடன் அவர் உரையாடுவார். பல நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

