பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 28 வயது ஆடவர், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொவிட்-19க்கு எதிரான மொடர்னா/ஸ்பைஸ்வேக்ஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.
அதற்கு 21 நாள்கள் கழித்து அவருக்கு இதயத் தசை அழற்சி ஏற்பட்டு அதன் காரணமாக அவர் மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பிலான முதல் மரணம் இதுதான் என சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது. அந்த ஊழியர், 2021 ஜூலை 9ஆம் தேதி தனது வேலை இடத்தில் மயங்கி விழுந்தார்.
இந்த மரணம் பற்றி விசாரித்த மரண விசாரணை அதிகாரி, இது துரதிருஷ்டவசமான மருத்துவச் சம்பவம் என்று தீர்ப்பில் தெரிவித்தார். மரணம் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி காரணமாக ஏற்பட்டு இருக்கும் வாய்ப்பு உள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர் மரணம் அடைந்ததை அடுத்து, சுகாதார அமைச்சின் தடுப்பூசிப் பாதிப்பு நிதி உதவித் திட்டத்தின்கீழ் ஆக அதிகமாக $225,000 தொகை அவரின் குடும்பத்திற்குக் கொடுக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை மனிதவள அமைச்சுடன் சேர்ந்து சுகாதார அமைச்சு செய்து வருகிறது. சிங்கப்பூரில் தேசிய தடுப்பூசிச் செயல்திட்டத்தின்கீழ் 17 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டது.
இரு வகை திறன்கொண்ட தடுப்பூசி காரணமாக ஏற்படக்கூடிய மரணங்கள் 100,000 தடுப்பூசிக்கு 0.1 என்ற அளவில் இருக்கிறது. ஒருவகை திறன்கொண்ட தடுப்பூசியைப் பொறுத்தவரை இந்த விகிதம் 100,000 தடுப்பூசிக்கு 1.1 ஆகும்.
இதயத் தசை அழற்சி என்பது வைரஸ் கிருமித்தொற்று மூலம் ஏற்படக்கூடியது. சில நேரங்களில் குறிப்பிட்ட வேதிப்பொருள், சில வகை மருந்துகள் ஒவ்வாமை, இதர வகை தொற்றுகளும் அதற்குக் காரணமாகலாம்.

