ரச்சனா வேலாயுதம்
'மங்கா' நாவல்களை கொண்ட முதலாவது முழு சுய சேவை நூலகம் நேற்று சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியின் நான்காவது மாடியில் திறக்கப்பட்டது.
தேசிய நூலக வாரியம் இந்த நூலகத்தில் 5,000 'மங்கா' ஜப்பானிய உயிரோவிய நூல்கள், கேலிச் சித்திர நாவல்களை காட்சிப்படுத்தியுள்ளது.
இவற்றில் சில சிங்கப்பூர் கேலிச் சித்திர நாவல்களும் உள்ளன. இவற்றில் 1,000 நூல்கள் ஜப்பானிய பதிப்பக நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
தேசிய நூலக வாரியத்தின் 'கிராப்-என்-கோ' என்ற சுயமாக இரவல் பெறும் சேவை இந்த நூலகத்தில் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் எட்டு நூல்கள் வரை இரவல் பெறலாம்.
'மிஸ்டர் கியாசு' என்ற இயந்திர மனிதர், மங்கா நூல்களை பரிந்துரைப்பதோடு, கிராப்-என்-கோ சேவையைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை வழிமுறைகளையும் வழங்குகிறது.
உள்ளூர் சமூக இயந்திரவியல் நிறுவனமான 'டெக்ஸ்-லேப்'புடன் சேர்ந்து தேசிய நூலக வாரியத்துடன் அந்த இயந்திர மனிதரைத் தயாரித்துள்ளது.
தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழி சேவைகள் பிரிவின் தலைவர் அழகிய பாண்டியன், "இதுபோன்ற தனித்து இயங்கும் நூலகங்களை தீவு முழுவதும் அறிமுகப்படுத்துவது எங்களுடைய நீண்டகாலத் திட்டம். பல்வேறு கலாசாரம் அடங்கிய இலக்கியத்தை மையப்படுத்தும் சிறிய நூலகங்களை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்," என்று கூறினார்.
மங்கா நாவல்கள், ஜப்பானிய கேலிச் சித்திர நூல்கள் மற்றும் உயிரோவிய நாவல்களின் ஒரு பாணி ஆகும். சிறுவர் முதல் பெரியோர் வரை இவற்றைப் படித்து மகிழலாம்.
மங்கா நூல் வலது புறத்தில் இருந்து இடமாக வாசிக்கப்படுகிறது.
ஜப்பானில் பல ஆண்டுகளாக வாசிக்கப்பட்டு வரும் இந்த வகை நூல், சிங்கப்பூரிலும் பிரபலமாகி உள்ளது.

