2017ல் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் முதல் தேர்தலை முன்னிட்டு, காவல்துறை விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும் உள்ளூர் காற்பந்துச் சங்கங்களான ஹவ்காங் யுனைடெட், உட்லண்ட்ஸ் வெலிங்டனின் அறிக்கைகளைப் பொய் கையொப்பமிட்டதாகவும் அரசு நீதிமன்றத்தில் நேற்று நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கேரி டான், சங் கியன் பெங், காவ் லாய் ஃபோங், லாவ் சீ யூங் ஆகியோர் அந்த நால்வர்.
ஸ்போர்ட் எஸ்ஜி அமைப்பு காவல்துறையிடம் அளித்திருந்த புகாரின் தொடர்பில், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தக விவகாரப் பிரிவு அதன் விசாரணையை நிறைவு செய்திருப்பதை காவல்துறை நேற்று உறுதிப்படுத்தியது.
தியோங் பாரு காற்பந்துச் சங்கம் நிதியை முறைகேடாக பயன்படுத்தியது, 2017ல் எஸ்-லீக்கில் பங்குபெறாத காற்பந்துச் சங்கங்களின் கணக்குத் தணிக்கைகளுக்கு இடையூறு செய்ய முயற்சி செய்தது உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து ஸ்போர்ட் எஸ்ஜி புகார் அளித்திருந்தது.
விசாரணையின் முடிவில் தெரியவந்த உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கவனமாக பரிசீலித்த பிறகும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துடன் ஏற்பட்ட இணக்கத்திற்குப் பிறகும், மற்ற விவகாரங்கள் குறித்து காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் தொடர்பில் மற்ற தனிநபர்களுக்கு எதிராக இனி நடவடிக்கை எடுக்கப்படாது என்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஸைனுடின் நோர்டின், சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் வின்ஸ்டன் லீ, ஹவ்காங் யுனைடெட் மற்றும் தியோங் பாரு காற்பந்துச் சங்கங்களின் தலைவர் பில் இங், அவருடைய மனைவி திருவாட்டி போனி வோங் உள்ளிட்டோர் அந்த தனிநபர்களில் அடங்குவர். இந்த நால்வரும் கைது செய்யப்பட்டு, வர்த்தக விவகாரப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்னதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
திரு ஸைனுடின், திரு லீக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வர்த்தக விவகாரப் பிரிவிடம் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் உத்தரவிட்டிருந்ததாக அதன் பேச்சாளர் 2021ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியிருந்தார்.

