மின்சைக்கிள்களை நடைபாதைகளில் ஓட்டியதற்காக கடந்த ஆண்டு 5,000க்கும் மேற்பட்ட மின்சைக்கிளோட்டிகளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தல் கடிதங்களை வழங்கியது.
பாதசாரிகள், ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, மோட்டார் வசதியுடைய சாதனங்கள் நடைபாதைகளில் அனுமதிக்கப்படமாட்டா என்று ஆணையம் கூறியது.
ஆணையத்திடம் உந்து நடமாட்ட அமலாக்க அதிகாரிகளும் துணைக் காவல்துறை அதிகாரிகளும் அடங்கிய குழு உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஆணையம் கூறியது. நடைபாதைகளில் மின்சைக்கிள்களை ஓட்டுவோரைக் கண்டறிய கண்காணிப்புக் கருவிகளும் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. மின்சைக்கிள்கள் நடைபாதைகளில் செல்லும் புதிய இடம் அடையாளம் காணப்படும்போது, கண்காணிப்புக் கருவிகள் அங்கு மாற்றப்படுகின்றன.
"அனைத்துப் பயனாளர்களின் பாதுகாப்புக்கும் ஆணையம் முன்னுரிமை அளிக்கிறது. குறிப்பாக, பாதசாரிகளே எளிதில் பாதிப்படையக்கூடிய பிரிவினராக உள்ளனர். இதைப் புரிந்துகொண்டு, மின்சைக்கிளோட்டிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்வர் என நம்புகிறோம். என்றாலும், தவறிழைப்போருக்கு எதிராக அமலாக்க நடவடிக்கையை எடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்," என்று ஆணையம் குறிப்பிட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த உணவு விநியோகச் சேவை நிறுவனங்களான கிராப்பும் டெலிவரூவும், ஆபத்தான முறையில் உந்து நடமாட்டச் சாதனங்களை ஓட்டுவதற்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை மறுவுறுதிப்படுத்தின. பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு நினைவுபடுத்துவதை தாங்கள் உறுதிசெய்வதாக இரு நிறுவனங்கள் கூறின.
நடைபாதைகளில் ஓட்டியதற்காக முதன்முறையாக பிடிபடும் மின்சைக்கிளோட்டிகளுக்கு $2,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோருக்கு $5,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

