வருடாந்திர சம்பள வரம்பையும் உயர்த்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கோரிக்கை
நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஓய்வுக்காலத்தில் போதுமான சேமிப்பு இருப்பது தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
உயரும் சம்பளத்திற்கு ஏற்ப மாதாந்திர மத்திய சேம நிதி சம்பள உச்சவரம்பு $6,000 என்னும் தற்போதைய அளவிலிருந்தும் 2026ஆம் ஆண்டில் $8,000ஆக உயர்த்தும் திட்டம் தொடர்பாக அவர்கள் பேசினர்.
நடுத்தர வருமானம் உடைய சிங்கப்பூரர்கள் தங்களது ஓய்வுக் காலத்தில் அதிகம் சேமிக்க உதவுவது அந்தத் திட்டம்.
ஓய்வுக்கால சேமிப்பை உயர்த்த வேண்டிய அவசியம் தொடர்பில் மன்ற உறுப்பினர்
களிடையே கருத்தொற்றுமை காணப்பட்டது.
இருப்பினும், மாதாந்திர சம்பள உச்சவரம்பை மாற்றுவது சரியான நடவடிக்கை என்பதில் சில உறுப்பினர்கள் மாற்றுக் கருத்து கொண்டிருந்தனர்.
மாதாந்திர சம்பள உச்ச
வரம்பை உயர்த்தும் நடவடிக்கையை வரவேற்றுப் பேசிய பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத் தொகுதி உறுப்பினர் லூயிஸ் சுவா, வருடாந்திர சம்பள உச்சவரம்பையும் உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
"தற்போதைய வருடாந்திர சம்பள உச்சவரம்பு $102,000 ஆக உள்ளது.
"இதனை உயர்த்தினால் சில ஊழியர்களுக்கு அதிகமான பங்களிப்புகள் கிடைக்கும். அதன்மூலம் பரந்த ஊழியர் குழு பலனடையும் சாத்தியம் உள்ளது," என்றார் அவர்.
வருடாந்திர சம்பள உச்ச
வரம்பை உயர்த்துவதன் தொடர்பில் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்படும் என்ற அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் இது தொடர்பான மாற்றம் சரியாக எப்போது இடம்பெறும் என்
பதைத் தெரிவிக்குமாறு திரு சுவா கோரினார்.
மேலும், உச்சவரம்பு மாற்றத்தால் பாதிக்கப்படுவோர் அதிக அழுத்தங்களை எதிர்நோக்கும் நிலை ஏற்படக்கூடும் என்றும் குறிப்பாக, அதிக மசே நிதி பங்களிப்பு காரணமாக குறைவான நிகர மாதச் சம்பளம் பெறக்கூடியவர்களுக்கு இது சவாலாக விளங்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜெசிக்கா டானும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
மசே நிதி பங்களிப்புக்காக அதிகம் கழித்தது போக கிடைக்கக்கூடிய குறைவான மாதச் சம்பளம் பெறும் ஒரு குடியிருப்
பாளரை அதற்கு அவர் உதாரணமாகச் சுட்டினார்.
"பணவீக்கமும் அது தொடர்பான அழுத்தமும் அதிகரிக்கும் நிலையில், ஊழியர்கள் தங்களது ஓய்வுக்கால சேமிப்பு அதிகரிப்பு மூலம் பலனடைவர் என்றபோதிலும் மாதாந்திர செலவுகளுக்கு குறைவான பணமே அவர்களுக்குக் கிடைக்கும் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என எனது தொகுதி குடியிருப்பாளர் கருத்து தெரிவித்தார்," என்றார் திருவாட்டி டான்.
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி உறுப்பினர் சக்தியாண்டி சுப்பாட் கூறுகையில், புதிய அணுகுமுறை $6,000க்கு மேல் மாதாந்திர சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களை இலக்
காகக் கொண்டிருப்பதுபோலத் தோன்றுவதாகத் தெரிவித்தார்.
இந்தப் பிரிவினருக்கு போதுமான ஓய்வுக்கால சேமிப்பு இருக்காது என்று அரசாங்கம் கருதுகிறதா என்றும் அவர் வினவினார். மாதாந்திர சம்பள உச்ச வரம்பு மாற்றம் காரணமாக முதலாளிகளின் மசே நிதி பங்
களிப்பு அதிகரிக்கும்போது சிறிய நிறுவனங்கள் அதிக நிதி அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பணவீக்க அதிகரிப்பு என்பது கவலைக்குரியதாக விளங்கும் வேளையில் அதற்கு இணையாக மசே நிதி சேமிப்புக்கான வட்டி விகிதம் ஏன் உயர்த்தப்படவில்லை என சிலர் கேட்பதாக திரு சக்தியாண்டி கூறினார்.
இந்த ஆண்டுக்கான சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் சராசரியாக 3.5 விழுக்காட்டுக்கும் 4.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

