தேசிய அளவிலான தேர்வில் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்ட துணைப்பாட ஆசிரியருக்கு, இவ்வழக்கு தொடர்பான இறுதிக் குற்றச்சாட்டில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றச் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவித்தது தொடர்பான குற்றச்சாட்டு அது.
அதன் பிறகு சென்ற வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலில் திருவாட்டி ஃபியோனா போ மின் (படம்) இக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தெம்பனிசில் செயல்பட்ட ஸீயஸ் எடுகேஷன் சென்டர் எனும் துணைப்பாட நிலையத்தில் ஃபியோனா பணிபுரிந்தார்.
நிலையத்தை அவரது உறவினரான திருவாட்டி போ யுவான் நீ நடத்தி வந்தார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கல்விச் சான்றிதழுக்கான சாதாரண நிலைத் தேர்வுகள் மூன்றில், ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட ஆறு மாணவர்களுக்கு இரு பெண்களும் உதவி செய்தனர்.
சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளூர் பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் சேர உதவும் பொருட்டு இருவரும் இவ்வாறு குறுக்குவழியை நாடினர். இதன் தொடர்பில் இருவர்மீதும் ஆளுக்கு 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஃபியோனாவுக்கு 2020ஆம் ஆண்டு இவ்வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதை அவர் நிறைவேற்றி வருகிறார்.
முன்னதாக 2016ஆம் ஆண்டில், நீதிமன்ற நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் ஏமாற்று வழக்கில் தொடர்புடைய ஒரு மாணவரை சிங்கப்பூரிலிருந்து வெளியேறும்படி ஃபியோனா ஆலோசனை கூறியிருந்தார்.
அதன்வழி நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
தற்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் மீண்டும் இதன் தொடர்பில் ஃபியோனாமீது இதே குற்றச்சாட்டை சுமத்த இயலாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

