புற்றுநோய் சிகிச்சைகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டத்தைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துவது குறித்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் தனியார் துறைக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1லிருந்து புற்றுநோய் மருந்துப் பட்டியலில் இடம்பெறும் சிகிச்சைகளுக்கு மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
ஆனால் ஏற்கெனவே இந்தப் பட்டியலில் இடம்பெறாத சிகிச்சையைத் தொடங்கிவிட்டவர்கள் கூடுதலாக ஆறு மாதங்களுக்கு (செப்டம்பர் 30) வரை ஒருங்கிணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு இந்த நோயாளிகளுக்கு உதவி செய்யும் வகையில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (பாட்டாளிக் கட்சி) லுயிஸ் சுவா கேள்வி எழுப்பினார். இதற்கு நாடாளுமன்றத்தில் நேற்று எழுத்துபூர்வமாகப் பதிலளித்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், புற்றுநோய் நோயாளிகளுக்கான சிகிச்சைகளின் வழக்கமான கால அளவை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார்.
பட்டியலில் இடம்பெறாத சிகிச்சை முறையைப் பெறும் பெரும்பாலான நோயாளிகளின் சிகிச்சை செம்டம்பர் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும் என்று அமைச்சர் ஓங் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பத்தில் ஒரு புற்றுநோயாளிப் பட்டியலில் இடம்பெறாத சிகிச்சையைப் பெற்றுக்கொள்கிறார்.
செப்டம்பர் மாதத்துக்குள் சிகிச்சை நிறைவடையாவிட்டால் இந்நோயாளிகளுக்கு மாற்று தெரிவுகள் உண்டு என்று அமைச்சர் ஓங் கூறினார்.
அவர்கள் உட்கொள்ளும் மருந்துகள் பட்டியலில் இடம்பெற சிகிச்சைப் பட்டியல் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்றார் அவர். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இப்பட்டியலில் முதலில் 270 சிகிச்சைகள் இடம்பெற்றன. தற்போது பட்டியலில் 340 சிகிச்சைகள் இடம்பெறுகின்றன.
பட்டியலில் இடம்பெறும் சிகிச்சைமுறைக்கும் நோயாளிகள் மாறலாம் என்று திரு ஓங் கூறினார். கடுமையான நோய்களுக்கான காப்புறுதித் திட்டம் அல்லது ரைடர்ஸ் திட்டம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டத்தைப் பயன்படுத்தலாம். பட்டியலில் இடம்பெறாத சிகிச்சை தேவைப்பட்டு, ஆனால் அதற்கான மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்படுவோர் மானியம் வழங்கப்படும் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது மெடிஃபண்ட் ஆதரவுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

