இந்த ஆண்டு சிங் மிங் விழா ஏப்ரல் 5ஆம் தேதி இடம்பெற இருக்கிறது.
அதனையொட்டி சில நாள்களில் அரசாங்கம் நிர்வகிக்கும் இடுகாடுகள், அஸ்தி காப்பகங்கள் ஆகிய பகுதிகளுக்குச் செல்லவேண்டாமென தேசிய சுற்றுப்புற வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சுவா சூ காங் இடுகாடு, சுவா சூ காங் அஸ்தி காப்பகம், மண்டாய் அஸ்தி காப்பகம், ஈசூன் அஸ்தி காப்பகம் ஆகியவற்றில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மார்ச் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 வரையிலான வார இறுதிகளில் அதிகமானோர் அங்கு செல்லக்கூடும். அஸ்தி காப்பகங்களில் கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும். அவை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று வாரியம் தெரிவித்தது.
சுவா சூ காங் இடுகாட்டில் உள்ள அஸ்தி தெளிப்பதற்கான 'அமைதிப் பூங்கா' பொதுமக்களுக்கு மூடப்படும். முன்பதிவு செய்தோர் மட்டுமே அங்கு செல்லலாம்.
மண்டாய், சுவா சூ காங் அஸ்தி காப்பகங்களில், குறிப்பிட்ட சில நேரங்களில் வாகனத்தை நிறுத்தவும் முன்பதிவு செய்தல் அவசியம்.
காத்திப் ரயில் நிலையத்திற்கு அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு அஸ்தி காப்பகங்களுக்குச் செல்ல பேருந்துச் சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேல்விவரங்களுக்கு வாரியத்தின் இணையத்தளத்தை நாடலாம்.

