போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் சிங்கப்பூரரான 32 வயது ஆடவர் சென்ற செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஏறக்குறைய ஐந்து கிலோகிராம் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு $182,000 எனக் கருதப்படுகிறது.
இரண்டு கிலோகிராம் கஞ்சா, 960 கிராம் ஹெராயின், 130 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த அமலாக்க நடவடிக்கையில், புக்கிட் தீமா ரோட்டிற்கு அருகே மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் இருந்த அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பொங்கோல் ஃபீல்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் போதைப்பொருள்கள் சிலவற்றைப் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று தெரிந்தே கடத்தல்காரர்கள் அவற்றை சிங்கப்பூருக்குள் கொண்டுவருவதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது. இதனால் போதைப்புழங்கிகளின் வாழ்வும் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுவதை அது சுட்டியது.
சமூகத்தில் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க கடுமையான சட்டம் நடப்பில் இருப்பதையும் தீவிர அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், 500 கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா அல்லது 15 கிராமுக்கு மேற்பட்ட ஹெராயினைக் கடத்தியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

