மருத்துவமனைகளின் ‘சி’ பிரிவு வார்டில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளிகள் ஏப்ரல் 1 முதல் ஏறக்குறைய $700 செலுத்தவேண்டி வரும். மருத்துவ உதவிக் கட்டணங்களையும் மெடிஷீல்ட் லைஃப் சலுகைகளையும் கழித்ததுபோக இந்தத் தொகையை அவர்கள் செலுத்த நேரிடலாம்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கொள்ளைநோய் தணிந்துவிட்டதாலும் கொரோனா கிருமியுடன் வாழும் முறையுடன் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாலும் கொவிட்-19 நோயாளிகள் இந்த அளவுக்குக் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் கொவிட்-19 நோயாளிகளுக்கு தற்போதைய சுகாதாரப் பராமரிப்பு உதவித் திட்டங்களும் மெடிஷீல்ட் லைஃப், மெடிசேவ் மற்றும் மெடிஃபண்ட் திட்டங்களும் ஆதரவு வழங்கும். மருத்துவமனைக் கட்டணங்களுக்கும் சிகிச்சைகளுக்கும் அவர்கள் மெடிசேவ் தொகையைப் பயன்படுத்தலாம்.
மெடிசேவ் கணக்கைப் பயன்படுத்த இயலாதவர்களுக்கும் $700 மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்படுவோருக்கும் மெடிஃபண்ட் கைகொடுக்கும் என்று சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளிகளுக்கும் இந்த நிதித் திட்டங்கள் பொருந்தும் என்று கூறிய திருவாட்டி ரஹாயு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் கொவிட்-19 நோயாளிகள் அனுமதிக்கப்படுவது அரிதாகி வருகிறது என்றார்.
மூன்றாண்டு கால கொள்ளைநோய்க்குப் பிறகு, பெரும்பாலான கொவிட்-19 நோயாளிகளுக்கு இலேசான அறிகுறிகளே தென்படுவதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நோய் தீவிரமடைவதில்லை என்றும் அவர் கூறினார்.
இயோ சூ காங் தனித்தொகுதி உறுப்பினர் யிப் ஹான் வெங் எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்து அவர் பேசினார். கொவிட்-19 நோய்க்கு ஆகக்கூடிய செலவுகள் பற்றியும் அவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் சுகாதாரப் பராமரிப்பு உதவிகள் பற்றியும் திரு யிப் கேட்டிருந்தார்.
சிங்கப்பூரின் நோய்க் குறியீட்டின் நிறம் பச்சைக்கு மாற்றப்படுவதாக பிப்ரவரி 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டதால் கொவிட்-19 நோயாளிகளுக்கான பரிசோதனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் வழங்கப்பட்டு வந்த முழுமையான உதவிகள் ஏப்ரல் முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கொவிட்-19 நோய் என்பது தனித்துவ வகையைச் சேர்ந்த நோயாக இனி இங்கு கருதப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் உதவிகள் குறைக்கப்படுகின்றன.
இருப்பினும் தடுப்பூசி என்பது முதல்நிலை தற்காப்பு என்பதால் தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்வது இலவசம் என்பது தொடரும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோரும் மருத்துவ ரீதியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாதோரும் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது அவர்களுக்கு முழுமையான மருத்துவக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
“ஏப்ரல் 1 முதல் இதில் மாற்றம் செய்யப்படும். கொவிட்-19 அறிகுறிகளுடன் பலதுறை மருந்தகங்களில் சிகிச்சை நாடுவோரிடம், சலுகைகளைக் கழித்ததுபோக $20 முதல் $35 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதர வகை கடுமையான சுவாச நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் அதேபோன்ற தொகை இவர்களிடம் வசூலிக்கப்படும்,” என்றார் திருவாட்டி ரஹாயு.